இந்தியாவின் நட்சத்திர பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் நேற்று முன்தினம் காலமானார். தனது தேன் கலந்த இனிமையான குரலால் இந்தியாவில் உள்ள எத்தனையோ கோடி மக்களின் நெஞ்சங்களில் குடியிருந்த இன்னிசை குயில் லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவு காரணமாக பல கோடி ரசிகர்களை விட்டுவிட்டு இயற்கை எய்தியுள்ளது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழில் கூட “வலையோசை கலகலவென” போன்ற பல பாடல்களை பாடி தமிழக மக்களின் நெஞ்சங்களிலும் அவர் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல நட்சத்திரங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
கிரிக்கெட் ரசிகை லதா:
திரை துறையில் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்த லதா மங்கேஷ்கர் இந்திய கிரிக்கெட்டின் மிகத் தீவிரமான ரசிகர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும். ஆம் கடந்த 1960 களில் இருந்தே இந்திய கிரிக்கெட்டின் தீவிர ரசிகையான அவர் இந்தியா விளையாடும் அனைத்து முக்கிய போட்டிகளையும் விடாமல் பார்த்து விடுவார்.
குறிப்பாக மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் 1970 மற்றும் 80களில் நடக்கும் அனைத்துப் போட்டிகளுக்கும் நேராக தனது சகோதரருடன் மைதானத்திற்கு சென்று கண்டு களிப்பதுடன் இந்திய அணிக்கு ஆதரவையும் கொடுத்து வந்தார். அந்த சமயத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் வலுவான வெஸ்ட் இண்டீசை தோற்கடித்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. அந்த போட்டியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து பார்த்த மங்கேஷ்கர் இந்தியாவிற்கு நேரடியாக களத்தில் இருந்து தனது ஆதரவை அளித்தார்.
நிதி திரட்டிய இன்னிசை குயில்:
அந்த சமயத்தில் தற்போது உள்ளது போல் அல்லாமல் பிசிசிஐயிடம் நிறைய பண பற்றாக்குறை நிலவியது. அதனால் முதல் முறையாக உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசு தொகை அளிக்க வழிதெரியாமல் பிசிசிஐ தவித்தது. அந்த இக்கட்டான தருணத்தில் லதா மங்கேஷ்கரை நாடிய பிசிசிஐ அவரிடம் உதவி கேட்டது.
உடனே எந்தவித தயக்கமும் இல்லாமல் உதவி செய்ய முன் வந்த அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு நிதி திரட்டும் வண்ணம் டெல்லியில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்த கச்சேரியில் கலந்து கொண்டார். சுமார் இரண்டு மணி நேரங்கள் நடந்த அந்த கச்சேரியில் சுமார் 20 லட்சம் வரை நிதி திரண்டதால் அந்தப் பணத்திலிருந்து கபில்தேவ் உட்பட இந்திய அணியில் இருந்த 14 வீரர்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. எஞ்சிய தொகையை கூட கையில் வாங்காத லதா மங்கேஷ்கர் அதை நேரு கிரிக்கெட் மைதானத்தின் வளர்ச்சிக்காக வழங்கினார். அந்த விலைமதிப்பில்லாத உதவிக்காக அப்போது முதல் இந்தியாவில் இந்தியா பஙகேற்க்கும் அனைத்து போட்டிகளிலும் அவருக்காக 2 விஐபி டிக்கெட்டுகளை பிசிசிஐ இன்றுவரை ஒதுக்கி வருகிறது.
விரதம் இருந்த மங்கேஷ்கர்:
அத்துடன் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடந்த ஐசிசி உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் முன்னிலையில் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சுமார் 9 மணி நேரம் அன்னமும் தண்ணீரும் அருந்தாமல் லதா மங்கேஷ்கர் விரதம் இருந்தார். இறுதியில் அவரின் வேண்டுதலுக்கு ஏற்றார் போலவே அபார வெற்றி பெற்ற எம் எஸ் தோனி தலைமயிலான இந்தியா பின்னர் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கடந்த வருடம் இந்தியாவின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி ஓய்வு பெற்றபோது அதனால் சோகம் அடைந்த லதா மங்கேஷ்கர் “எம்எஸ் தோனி நீங்கள் ஓய்வு முடிவை திரும்பப் பெற்று இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும்” என தனது ட்விட்டரில் கேட்டுக்கொண்டார். இப்படி இந்திய கிரிக்கெட் மீது தீராத அன்பையும் பற்றையும் வைத்திருந்த இவரை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எப்போதுமே “அம்மா” என்று அன்போடு அழைத்துவந்தார். தற்போது அவர் நம்மை விட்டு சென்றாலும் அவரின் அன்பும் ஆதரவும் இந்திய மக்களின் மீது என்றுமே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.