உலக கோப்பை தொடர் போட்டிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
அதன்படி இந்தியாவில் ஒளிபரப்பப்படும் கிரிக்கெட் போட்டிகளில் விமர்சனம் செய்யவும், போட்டிக்கிடையே விவாதம் செய்யவும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த முன்னாள் வீரரான பிரைன் லாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆனார்.
அதன்படி உலக கோப்பை தொடர் முடியும் வரை இந்தியாவில் இருந்து போட்டியை வர்ணனை மற்றும் விவாதம் போன்று பல நிகழ்ச்சிகளை அவர் செய்வதற்காக இந்தியாவில் தங்கி உள்ளார். தற்போது அவருக்கு சூட்டிங்கின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. பிறகு தற்போது இதுகுறித்து மருத்துமனையிலிருந்து லாரா விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் லாரா கூறியதாவது : நேற்றுமுன்தினம் ஜிம்மில் வழக்கத்தை விட அதிக அளவு உடற்பயிற்சி செய்ததால் மார்பின் கீழே அழுத்தத்தை உணர்ந்தேன். இதன் காரணமாக எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே மும்பை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் தற்போது நலமாக உள்ளேன். விரைவில் மேற்கிந்திய தீவுகளுக்கு திரும்பி முழு உடல் நலத்துடன் இந்தியா திரும்ப வருவேன் என்று லாரா மும்பை மருத்துவமனையில் இருந்து லாரா பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார்.