வேறு எந்த பவுலரும் செய்யாத தனித்துவ சாதனை.. ஹஸரங்காவை முந்திய குல்தீப்.. பிறந்தநாளில் புதிய உலக சாதனை

Kuldeep yadav Birthday
- Advertisement -

ஜொஹன்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 3 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் 2வது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்காவுக்கு 3வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்த இந்தியா தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை காண்பித்து 1 – 1 என்ற கணக்கில் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் சூரியகுமார் யாதவ் 100 (56), ஜெய்ஸ்வால் 60 (41) ரன்கள் எடுத்த உதவியுடன் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதைத் துரத்திய தென்னாபிரிக்கா ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் சாமர்த்தியமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

குல்தீப் உலக சாதனை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் மில்லர் 35 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார். இருப்பினும் 2.5 ஓவரிலேயே 17 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் அறிவிக்கப்படாத ஆட்டநாயகன் அசத்தினார் என்றே சொல்லலாம்.

குறிப்பாக டிசம்பர் 14ஆம் தேதி தம்முடைய 29வது பிறந்த நாளை கொண்டாடிய அவர் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி டேவிட் மில்லர் உட்பட தன்னுடைய கடைசி 7 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதை விட இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தம்முடைய பிறந்தநாளில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் மற்றும் சிறந்த பவுலிங்கை (5/17) பதிவு செய்த பவுலர் ஆகிய 2 தனித்துவமான உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் வணிந்து ஹஸரங்கா தம்முடைய பிறந்தநாளில் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் 5/24 விக்கெட்களை எடுத்த குல்தீப் யாதவ் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினார்.

இதையும் படிங்க: ரோஹித் 16, மேக்ஸ்வெல் 11 வருடத்தில் செய்த சாதனையை 3 வருடத்தில்.. சமன் செய்த சூரியகுமார் புதிய உலக சாதனை

அந்த வகையில் ஜொஹன்ஸ்பர்க், மான்செஸ்டர் ஆகிய 2 வெளிநாட்டு மைதானங்களில் நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் குல்தீப் 5 விக்கெட்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 2 முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பும்ரா, சஹால் போன்ற யாருமே செய்யாத மாபெரும் சாதனையையும் குல்தீப் யாதவ் படைதுள்ளார்.

Advertisement