உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 140 ரன்களும், கோலி 77 ரன்களையும் குவித்தனர்.
அதன் பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழைய குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் அதாவது 40 ஓவர்களில் 302 ரன்கள் அடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்த போட்டியில் இந்த மைதானத்தில் எந்த ஒரு வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை. நாங்கள் டாஸ் வென்று இருந்தாலும் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம். இந்த பிட்ச் இரண்டாம் பாதியில் நன்றாக திரும்பியது. இந்த போட்டியில் ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்து தங்களது ஆட்டத்தை நிரூபித்தனர்.
குல்தீப் யாதவ் அருமையாக பந்துவீசினார் பாபர் அசாம் விக்கெட் வீழ்த்தியது சிறப்பான ஒன்றாகும். மேலும் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடினார்கள். இந்த போட்டியில் நாங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆடியிருந்தால் விஷயங்கள் தவறாக போயிருக்கும். ஆனால் நாங்கள் விளையாட்டை விளையாட்டாக பார்த்து ஆடியதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றோம் என்று கோலி கூறினார்