உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி நேற்று மதியம் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தநிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் தவான் 117 ரன்களும், கோலி 82 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின்னர் 353 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 316 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்மித் 69 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சதமடித்த தவான் ஆட்டநாயகனாக தேர்வானார்.
இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி ஹர்திக் பாண்டியா குறித்து கூறியதாவது : இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவை 4-வது வீரராக நாங்கள் களமிறக்க நாங்கள் விரும்பினோம். இதன் காரணம் யாதெனில் முன்பே நாங்கள் போட்ட திட்டம் தான் அது. அதன்படி நாங்கள் முதலில் பேட் செய்யும் பொழுது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூன்று பேரில் ஒருவர் சதம் அடித்தால் 4-வது வீரராக ஹர்திக் பாண்டியா களமிறக்கி திட்டமிட்டோம். அவர் இறங்கினால் இந்திய அணியின் ஸ்கோரை உயரும் என்று நினைத்தோம்.
அதன்படி இந்த திட்டத்தை நிறைவேற்றவே தவான் சதம் அடித்ததும் ஹர்டிக் பாண்டியா யாரும் எதிர்பார்க்காத வகையில் 4-வது வீரராக களம் இறங்கினார். களமிறங்கியதும் அவரது வேலையை அவர் மிகக்கச்சிதமாக செய்தார். இதே போன்று அணியின் தேவைக்கேற்ப எந்த வீரரும் எந்த இடத்தில் இறக்கவும் அணியில் மாற்றுத் திட்டங்கள் உள்ளன. இது இந்திய அணியின் பலம் ஆகவே நான் கருதுகிறேன். ஆட்டத்தின் தன்மையை பொறுத்து அணியில் விளையாடும் வீரர்கள் இடம் மாற்றப்படும் என்றும் கோலி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.