கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத நிலையில் தற்போது இங்கிலாந்து மற்றும் வெஸ்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் தற்போது நேற்று ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இதன்படி இந்த புதிய தரவரிசை பட்டியலில் மீண்டும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (871 புள்ளிகளுடன்) முதலிடத்திலும், துணை கேப்டன் ரோகித் சர்மா (855 புள்ளிகளுடன்) 2-வது இடத்திலும் தொடர்கின்றனர்.
மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான பாபர் அசாம் (829 புள்ளிகளுடன்) திகழ்கிறார். அயர்லாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த கேப்டன் மோர்கன் ஒரு இடம் முன்னேறி 22 ஆவது இடத்தையும், பேர்ஸ்டோ 13 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை பொறுத்தவரை நியூசிலாந்து அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்ட் (722 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (719 புள்ளிகளுடன்) இரண்டாவது இடத்தை தொடர்கிறார்.
அயர்லாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அடில் ரஷித் 25 ஆவது இடத்தையும், 8 விக்கெட் வீழ்த்திய டேவிட் வில்லி 51 வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் முகமது நபி முதலிடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 8 ஆவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.