- Advertisement -
ஐ.பி.எல்

டிவி-ல இதுமாதிரி பாத்திருக்கேன்.. சன் ரைசர்ஸ் அணியின் வெற்றியால் மிரண்டு போன கே.எல் ராகுல் – அளித்த பேட்டி

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியில் விளையாடிய பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 10 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு சேர்த்து நடப்பு ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலிலும் 7 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதே வேளையில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது இந்த தொடரில் ஆறாவது தோல்வியை சந்தித்து தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கும் சரிந்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 9.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : பேசுவதற்கு என்னிடம் வார்த்தையே இல்லை இது போன்ற ஒரு பேட்டிங்கை நான் இதற்கு முன் டிவியில் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போது நேரில் பார்த்துள்ளேன். உண்மையிலேயே நம்ப முடியாத வகையில் சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.

- Advertisement -

அவர்கள் பேட்டில் படும் பந்துகள் எல்லாம் பவுண்டரிக்கு பறந்து கொண்டிருந்தன. சிக்ஸ் ஹிட்டிங்கில் அவர்கள் நிறையவே பயிற்சி செய்துள்ளார்கள் என்பது இந்த போட்டியின் மூலம் தெரிந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸ்ஸின் போது அவர்கள் ஒரு வாய்ப்பினை கூட எங்களுக்கு வழங்கவில்லை. இந்த மைதானத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு விளையாடினர்.

இதையும் படிங்க : உண்மையிலேயே இதை என்னால நம்பமுடியல.. லக்னோ அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் பேட்டி

முதல் பந்தில் இருந்தே அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் 40 முதல் 50 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். நாங்கள் பவர்பிளேவிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் அடுத்து அதிரடியாக செல்ல முடியவில்லை. இருந்தாலும் ஆயுஷ் பதோனி, நிக்கோலஸ் பூரான் ஆகியோர் சிறப்பாக விளையாடியிருந்தனர். ஒருவேளை நாங்கள் 240 ரன்கள் அடித்திருந்தால் கூட இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி திருப்பி அடித்திருக்கும் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -