வீடியோ : பெரிய காயத்தால் வெளியேறிய ராகுல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் நினைத்து ரசிகர்கள் சோகம் – என்ன நடந்தது?

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 1ஆம் இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து கேப்டன் டு பிளேஸிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கி அதிரடியாக விளையாட துவங்கினர். குறிப்பாக 2வது ஓவரின் கடைசி பந்தில் டு பிளேஸிஸ் கவர்ஸ் திசையில் அதிரடியான பவுண்டரியை பறக்க விட்டார். அதை வேகமாக துரத்திச் சென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பந்தை வெற்றிகரமாக தடுத்த போதிலும் துரதிஷ்டவசமாக தசைப் பிடிப்பு காயத்தை சந்தித்தார்.

குறிப்பாக அதிகப்படியான வலியை உணர்ந்து வேதனையில் தவித்த அவரை உடனடியாக லக்னோ அணியின் மருத்துவ குழுவினர் மைதானத்திற்குள் வந்து சோதித்தனர். இருப்பினும் அதிகப்படியான வலியை உணர்ந்த அவர் கண்ணை மூடிக்கொண்டதால் காயம் பெரியதாக இருப்பதாக தெரிந்தது. அதனால் களத்திலிருந்து தூக்கி செல்வதற்கு பலகை கொண்டு வரப்பட்ட நிலையில் மருத்துவர் கொடுத்த முதலுதவி காரணமாக சற்று வலி குறைந்த ராகுல் மெதுவாக எழுந்து நடந்து இப்போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதனால் தற்காலிக கேப்டனாக க்ருனால் பாண்டியா லக்னோவை வழி நடத்தினர்.

- Advertisement -

ரசிகர்கள் சோகம்:
இருப்பினும் முதலுதவிகளையும் தாண்டி நடக்க முடியாமல் மெதுவாக வலியுடன் மைதானத்தை விட்டு கேஎல் ராகுல் வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது. ஏனெனில் என்ன தான் டி20 கிரிக்கெட்டில் சற்று மெதுவாக விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய வீரராக கருதப்படும் அவர் வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பை ஃபைனலில் விக்கெட் கீப்பராக அல்லது தொடக்க வீரராக விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்த போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் பொதுவாகவே இது போன்ற தசைப்பிடிப்பு காயம் ஏற்படும் போது அது சற்று பெரிதாக இருக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கு வழி வகை செய்யும். அதனால் குணமடைவதற்கு ஒரு மாதம் தேவைப்படும் என்பதே இந்திய ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதனால் இந்த காயத்தை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் போது தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ராகுல் விளையாடுவாரா என்பது தெரியும்.

- Advertisement -

ஒருவேளை இங்கிலாந்து மண்ணில் 2 சதங்களை அடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிறப்பான அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் ஃபைனலில் இருந்து வெளியேறினால் அது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் அவருடைய காயம் பெரிதாக இருக்கக்கூடாது என்றும் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட விராட் கோலி 31 (30) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த அனுஜ் ராவத் 9 (11), கிளன் மேக்ஸ்வெல் 4 (5), பிரபுதேசாய் 6 (7) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஏற்கனவே லக்னோ மைதானம் பேட்டிங்க்கு சவாலாக இருக்கும் நிலையில் இடையே மழை குறுக்கிட்டதால் சற்று தாமதமாக மீண்டும் நடைபெற்ற அந்த போட்டியில் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸ் 44 (40) ரன்களில் அவுட்டானார்.

இதையும் படிங்க:வீடியோ : அன்று பானி பூரி விற்ற மும்பையில் இன்று சரித்திரம் படைத்த ஜெய்ஸ்வால் – நெகிழ்ச்சியான பின்னணி, சாதனைகள் இதோ

இறுதியில் தினேஷ் கார்த்திக் 16 (11) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூரு 126/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக முதல் 10 ஓவர்களில் 62/0 ரன்கள் எடுத்த பெங்களூரு கடைசி 10 ஓவர்களில் 64/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்னோய் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Advertisement