வாழ்வா சாவா போட்டியில் அசத்திய கொல்கத்தா – மீண்டும் சொதப்பிய மும்பை பரிதாபம், நடந்தது இதோ

Rohit Sharma vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் பரபரப்பான உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 9-ஆம் தேதி நடைபெற்ற 56-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. நவி மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு இம்முறை வெங்கடேஷ் ஐயர் – அஜிங்கிய ரகானே தொடக்க வீரர்களாக களமிறங்கி 60 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

Rohit Sharma vs KKR Shreyas Iyer

- Advertisement -

அதில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 (26) ரன்கள் எடுத்து வெங்கடேச ஐயர் ஆட்டமிழக்க அடுத்த ஒருசில ஓவர்களுக்கு பின் 25 (24) ரன்கள் எடுத்த ரகானேவும் அவுட்டானார். அந்த நிலைமையில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல 9 (5) ரன்களில் ஜஸ்பிரித் பும்ரா பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் மறுபுறம் நித்திஷ் ராணா அதிரடியாக பேட்டிங் செய்ததால் 139/4 என ஓரளவு நல்ல நிலைமையில் கொல்கத்தா இருந்தது.

பும்ரா மிரட்டல்:
அப்போது இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்த மும்பையின் நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 (26) ரன்கள் எடுத்த நிதிஷ் ராணாவை காலி செய்தார். அத்துடன் 17-வது ஓவரில் ஷெல்டன் ஜேக்சன் 5 (7) பட் கமின்ஸ் 0 (2) சுனில் நரேன் 0 (1) என 3 பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் அவுட் செய்து மெய்டன் ஓவராக வீசி மிரட்டினார். அதனால் 180 ரன்கள் தொடவேண்டிய கொல்கத்தா 20 ஓவர்களில் 165/9 ரன்கள் மட்டுமே எடுக்க பந்துவீச்சில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்த பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

Jasprith Bumrah vs KKR

அதை தொடர்ந்து 166 என்ற நல்ல இலக்கை துரத்திய மும்பைக்கு முதல் ஓவரிலேயே 2 (6) எடுத்திருந்த கேப்டன் ரோகித் சர்மா சர்ச்சைக்குரிய முறையில் அம்பயரால் கேட்ச் என அவுட் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்து வந்த திலக் வர்மா 6 (5) ரன்களில் நடையை கட்டியதால் 32/2 என ஆரம்பத்திலேயே அந்த அணி பின்னடைவை சந்தித்தது. போதாகுறைக்கு ரமந்தீப் சிங் 12 (16) டிம் டேவிட் 13 (9) போன்ற முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இருந்தாலும் மறுபுறம் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 51 (43) ரன்கள் எடுத்து போராடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசனும் 15-வது ஓவரில் ஆட்டமிழந்ததால் 100/5 என திணறிய மும்பையின் தோல்வி உறுதியானது.

- Advertisement -

மும்பை பரிதாபம்:
அந்த நேரத்தில் கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்ட போது களத்தில் இருந்த நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரன் அவுட்டாகி ஏமாற்றிய அவருடன் இதர வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை படுதோல்வி அடைந்தது. கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஆண்ட்ரே ரசல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

Pollard Mi

 

- Advertisement -

அதனால் 52 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா பங்கேற்ற 12 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆப் சுற்றில் வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது. முன்னதாக ஏற்கனவே 7 தோல்விகளை பதிவு செய்து விட்டதால் அந்த அணிக்கு இப்போட்டி வாழ்வா சாவா போட்டியாக அமைந்தது. அப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்கவில்லை என்றாலும் கூட பந்துவீச்சில் அசத்திய கொல்கத்தா பெரிய வெற்றியை சுவைத்தது.

சமீபத்திய போட்டிகளில் அந்த அணியின் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில் இந்த போட்டியில் பட் கமின்ஸ் 3, ஆண்ட்ரே ரசல் 2, டிம் சௌதீ 1 ஆகியோர் அசத்தலாக பந்துவீசி மும்பையை பெரிய அளவில் ரன்கள் எடுக்க விடாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் எடுத்தனர். குறிப்பாக கடந்த போட்டிகளில் சொதப்பிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கூட இன்று கிடைத்த வாய்ப்பில் 1 விக்கெட் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

KKR Shreyas Iyer

மறுபுறம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட மும்பை பேட்டிங்கில் 166 என்ற ரன்களைக் கூட எடுக்காமல் சொதப்பி பங்கேற்ற 11 போட்டிகளில் 9-வது தோல்வியை பதிவு செய்து பரிதாபத்திற்கு உள்ளாகியது. ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோன நிலையில் எஞ்சிய போட்டிகளிலாவது வெற்றி பெறும் என அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் காயத்தால் விலகியது பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் ரோஹித் சர்மா, டிம் டேவிட், கைரன் பொல்லார்ட் போன்ற முக்கிய வீரர்கள் கணிசமான ரன்களை கூட எடுக்காததால் அந்த அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது.

Advertisement