நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் என அடுத்தடுத்த தொடர்களில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த வேளையில் அடுத்த 2025-2027 ஆம் ஆண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கவுள்ள இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில் இடத்தில் கருண் நாயர் :
அந்த தொடருக்கான இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று கேப்டனையும், புதிய துவக்க வீரரையும் அறிவித்தாக வேண்டும். அதேபோன்று ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்பப்போகும் அந்த புதிய வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே ரோகித் சர்மாவிற்கு பதிலாக மாற்று துவக்க வீரராக இடம்பெற வாய்ப்புள்ள வீரர்கள் குறித்த பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வரும் வேளையில் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் இருந்து மீண்டும் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும் மூன்றாவது இடத்தில் கருண் நாயர் விளையாட வேண்டும் என்ற ஆதரவுகளும் குவிந்து வருகின்றன.
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை துவக்க வீரராக அறிமுகமாகி ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த சுப்மன் கில் அதன்பிறகு புஜாராவின் மூன்றாவது இடத்தில் களமிறங்கி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அதன் காரணமாக அவர் மீண்டும் துவக்க வீரராக களம் இறங்கினால் அது அவரின் டெஸ்ட் பார்மை மீட்டெடுக்க உதவும். அதேபோன்று இந்திய அணிக்காக இரண்டாவது வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கிற்கு அடுத்து முச்சதம் அடித்த கருண் நாயர் பல ஆண்டுகளாக டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இவ்வேளையில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மலை போல் ரன்களை குவித்திருக்கும் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கருண் நாயர் மூன்றாவது இடத்தில் களமிறங்கினால் நிச்சயம் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய கருண் நாயர் நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் தனது பார்மை டாப் ஆர்டரிலும் அற்புதமாக வெளிக்கொணர்ந்தார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் அந்த இடத்தை சாய் சுதர்சனால் நிச்சயம் நிரப்ப முடியும் – தமிழ்நாடு பேட்டிங் கோச் கருத்து
இதன் காரணமாக சுப்மன் கில் களமிறங்கும் மூன்றாம் இடத்தில் கருண் நாயர் களமிறங்கினால் நிச்சயம் அவரால் மிகப்பெரிய இன்னிங்ஸ்ஸை கட்டமைத்து விளையாட முடியும் என்றும் அதனால் சுப்மன் கில்லை துவக்க வீரராக மாற்றி அவரது இடத்தை கருண் நாயருக்கு கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.