வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுக வீரராக களமிறங்கிய 21 வயதான இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடியான பேட்டிங் மற்றும் அசத்தலான ஆட்டம் காரணமாக ஒரே போட்டியில் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதோடு இந்த இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அறிமுகவீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களமிறங்குவார் என ரோகித் அறிவித்ததால் மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் அப்போது ஒரு பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியது.
ஆனாலும் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஜெய்ஸ்வால் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். ஒவ்வொரு முறையும் ஜெய்ஸ்வால் கிரிக்கெட் களத்தில் சிறப்பாக செயல்படும் போதும் அவரது கடந்த காலத்தில் இருந்த ஒரு கதை வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்படும் முன்னர் வரை கிரிக்கெட் பயிற்சிக்காக பானி பூரி விற்றதாக மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது.
ஆனால் ஜெய்ஸ்வாலின் சிறுவயது பயிற்சியாளரான ஜுவாலா சிங் இந்த வதந்திகளை முற்றிலும் நிராகரித்து இந்த கதைக்கான முடிவையும் தற்போது அறிவித்துள்ளார். அந்த வகையில் அவர் பானி பூரி விற்றதாக கூறப்படும் எந்த கதையும் உண்மை இல்லை என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய ஜுவாலா சிங் கூறுகையில் : ஜெய்ஸ்வால் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டிலும் தனது வாழ்க்கையிலும் மிகத் திறமையானவராக இருந்தார். அவர் ஆரம்பத்தில் இருந்தே கிரிக்கெட் பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டார் என்பதை மறந்து விடாதீர்கள்.
இதுபோன்ற தவறான கதைகள் அவரது உழைப்பையும் இழிவு படுத்துவதாக தெரிகிறது. நான் சமூக வலைதளத்தில் இதுபோன்ற செய்திகளை பொய்யாக பரப்பும் பலரிடம் பலமுறை இதுபோன்று தவறான செய்திகளை பகிர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் என்னை நிராகரித்தனர். ஜெய்ஸ்வால் சிறுவயதில் அளித்த பேட்டி ஒன்றில் விளையாட்டாக அப்பாவித்தனமாக பானி பூரி சம்பவத்தை குறிப்பிட்டார். ஆனால் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க சமூக ஊடகவியலாளர்கள் அதனை தலைப்பாக பயன்படுத்திக் கொண்டு வதந்தியை பரப்பினர்.
ஜெய்ஸ்வால் குறித்து ஒவ்வொரு முறை செய்தி வரும் போதும் அவர் ஒரு பானி பூரி விற்கும் நபருடன் இருக்கும் புகைப்படம் பகிரப்படுகிறது. மேலும் அந்த நபரை அவரது தந்தை என்று ஊடகங்களும் கூறுகின்றன. ஆனால் அது எதுவுமே உண்மை கிடையாது. அவர் எந்த ஒரு கட்டத்திலும் பானி பூரி விற்கவில்லை. அந்த புகைப்படத்தில் இருப்பவர் அவரது தந்தையும் கிடையாது.
(இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தான் ஜெய்ஸ்வாலின் உண்மையான பெற்றோர் மற்றும் குடும்பம்)
ஜெய்ஸ்வாலின் தந்தை ஒரு சிறிய பெயின்ட் ஷாப் வைத்துள்ளார் இதுதான் உண்மை. ஜெய்ஸ்வால் என்னுடன் 2013ஆம் ஆண்டு முதல் பயிற்சியை துவங்கி விட்டார். அவர் எந்த நேரத்திலும் பானி பூரி விற்க செல்லவில்லை. இந்த விஷயத்தில் அனைத்துமே கற்பனையான ஒன்று அதனை ஊதி ஊதி பெரிதாக்கி விட்டார்கள். எனவே மீண்டும் ஒருமுறை இதேபோன்று வெளியாகும் செய்திகளை தவிர்த்து விடுங்கள்.
மும்பையில் வந்து அவர் சில நாட்கள் கூடாரத்தில் வசித்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் என்னுடன் வந்த பின்னர் எந்தவொரு இன்னலையும் அவர் சந்திக்கவில்லை. அதோடு அவரது பெற்றோரும் மாதம் அவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புவார்கள்.
இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதல் நபராக இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ள ரோஹித் சர்மா – என்ன தெரியுமா?
மற்றபடி அவரது பயிற்சி, உணவு, தங்குமிடம், பிறவசதிகள் என அனைத்தையும் நான் பார்த்துக்கொண்டேன். எனது வாழ்வில் ஒன்பது ஆண்டுகளை நான் அவருக்காக செலவிட்டுள்ளேன். இனிமேல் அவர் பானி பூரி விற்றார். அவர் தந்தை பானி பூரி விற்பவர் என்றெல்லாம் எந்த பொய்க்கதைகளையும் எழுத வேண்டாம் என ஜெய்ஸ்வாலின் இளம் வயது பயிற்சியாளர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.