ஐபிஎல் தொடரில் 49 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரானா 61 பந்துகளில் 87 ரன்களையும், சுப்மான் கில் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 21 ரன் குவிக்க கொல்கத்தா அணி 172 ரன்களை குவித்தது.
அதன் பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் 53 பந்துகளில் 72 ரன்களையும், அம்பத்தி ராயுடு 38 ரன்களும் குவித்தனர். இறுதிநேரத்தில் ஜடேஜா 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரி என 31 ரன்களை அடித்து அசத்தினார். ருதுராஜ் ஆட்டநாயகனாக தேர்வானார்.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா கூறுகையில் : நான் வலைப்பயிற்சியின் போது பந்துகளை சிறப்பாக அடித்து பயிற்சி பெற்றேன். அதனால் இந்த போட்டியில் மிகப்பெரிய சிக்சர்களை அடிக்க முடிந்தது. இந்த போட்டியிலும் கடைசியில் 2 சிக்சர்களை என்னால் பெரிதாக அடிக்க முடிந்தது. களத்தில் நானும் சாம் கரனும் இருக்கும்பொழுது பவுலர்களைப் பற்றி கவலைப்படாமல் விளையாட வேண்டும் என்றும் நினைத்தோம்.
கடைசி 12 பந்துகளை யார் வீசுவது என்று பார்க்காமல் பந்தை மட்டும் பார்த்து அடிக்க வேண்டும் என திட்டமிட்டோம். நான் எனது பேட்டிங்கில் சாதகமான ஏரியாவில் பந்து வந்தால் சிக்ஸ் அடிக்க முடியும் என நினைத்தேன். அதன்படி பந்துகள் வந்ததால் என்னால் சிறப்பாக ஆட முடிந்தது ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி அடைவது மகிழ்ச்சியைத் தரும் என ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.
This one was for the fans. Thank you for the fantastic support. 💛💪#whistlepodu @chennaiipl pic.twitter.com/mMJTgrwnfs
— Ravindrasinh jadeja (@imjadeja) October 29, 2020
இந்நிலையில் கொல்கத்தா அணியுடனான இந்த வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜடேஜா : இது எல்லாம் சென்னை அணியில் ரசிகர்களுக்காக தான். அவர்களுக்கான அன்பிற்கு நன்றி என்று அவர் பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.