அடிக்குற அடியை பாத்தா கப்பே இவங்களுக்கு தான் போல.. பெங்களூரு அணியை கிழித்து தொங்கவிட்ட ராஜஸ்தான் – தரமான சம்பவம

Jost Buttler 109
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து பிளே ஆஃப் போட்டிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 27இல் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்திடம் தோல்வியடைந்த ராஜஸ்தானை எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்த பெங்களூரு எதிர்கொண்டது. இப்போட்டியில் வெல்பவர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்ற சூழ்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு பார்மின்றி தவிக்கும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆரம்பத்திலேயே 7 (8) ரன்களில் அவுட்டாகி இந்த முக்கிய போட்டியில் மீண்டும் கைவிட்டார்.

faf

- Advertisement -

அதனால் 9/1 என தடுமாறிய அந்த அணியை எலிமினேட்டர் போட்டியில் 112* (54) ரன்கள் விளாசி காப்பாற்றிய இளம் வீரர் ரஜத் படிதார் மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் உடன் இணைந்து அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார். ஆனால் அவருக்கு கை கொடுக்க வேண்டிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் மெதுவாக விளையாடி 25 (27) ரன்களில் நடையை கட்ட அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 24 (13) ரன்கள் எடுத்தாலும் திடீரென ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

சொதப்பிய பெங்களூரு:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து தனது அணியை அதிரடியாக காப்பாற்ற முயன்ற ரஜத் படிதார் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 58 (42) ரன்களில் போராடி ஆட்டமிழந்தார். அதனால் 130/4 எனத் தடுமாறிய அந்த அணியை இந்த வருடம் முழுவதும் கடைசி நேரத்தில் களமிறங்கி மிரட்டலாக பேட்டிங் செய்து சிறந்த பினிஷராக காப்பாற்றி வந்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்க்கும் 6 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அந்த நிலையில் மஹிபால் லோம்ரோர் 8 (10) ஷாபாஸ் அஹமட் 12* (8) என இளம் வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவர்களில் பெங்களூரு 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அளவுக்கு பந்துவீச்சில் அசத்திய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ஓபேத் மெக்காய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Rajat Patidar 58

அதை தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஓப்பனிங் ஜோடி பவர்ப்ளே ஓவர்களில் சரவெடியாக பேட்டிங் செய்து 5.1 ஓவர்களிலேயே 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தபோது 1 பவுண்டரி 2 சிக்சருடன் ஜெய்ஸ்வால் 21* (13) ரன்களில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு 23 (21) எடுத்து 12-வது ஓவரில் வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பைனலில் ராஜஸ்தான்:
இடையில் தேவதூத் படிக்கல் 9 (12) ரன்களில் அவுட்டானாலும் கூட மறுபுறம் நங்கூரமாக நின்று பெங்களூர் பவுலர்களை நிதானமாகவும் அதிரடியாகவும் எதிர்கொண்ட ஜோஸ் பட்லர் 10 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 106* (60) ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் இந்த வருடத்தில் 4-வது சதத்தை பதிவு செய்தார். அதனால் 18.1 ஓவரிலேயே 161/3 ரன்களை எடுத்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்த வெற்றியால் குவாலிபயர் 1 போட்டியில் தோற்றாலும் 2-வதாக கிடைத்த குவாலிபயர் 2 எனும் பொன்னான வாய்ப்பில் அற்புதமாக செயல்பட்ட ராஜஸ்தான் 2008க்கு பின் 13 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

Jos Buttler 103

அதிலும் எலிமினேட்டர் போட்டியில் அட்டகாசமாக செயல்பட்ட பெங்களூருவை அடித்து துவைத்து தொங்க விட்டதை பார்த்தால் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லாமல் ராஜஸ்தான் இந்த தொடரிலிருந்து போக மாட்டார்கள் போல என்று தோன்ற வைக்கிறது. குறிப்பாக முக்கியமான நேரத்தில் ஜோஸ் பட்லர் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. இதனால் மே 29இல் நடைபெறும் குஜராத்துக்கு எதிரான மாபெரும் பைனலில் வென்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு ஆர்சிபி:
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி, டு பிளேஸிஸ் ஆகியோர் ஏமாற்றினாலும் ரஜத் படிதார் மீண்டும் தனி ஒருவனாக அசத்தல் பேட்டிங் செய்தார். அதனால் 13 ஓவர்களில் 107/2 என நல்ல நிலைமையில் இருந்த அந்த அணி அடுத்த 7 ஓவர்களில் ராஜஸ்தானின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 6 விக்கெட் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்து கடைசி நேரத்தில் பேட்டிங்கில் சொதப்பியதே இந்த தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

RCB Faf Du Plessis

வரலாற்றில் இதுபோல் எத்தனையோ வருடங்களில் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டும் முக்கியமான தருணத்தில் சொதப்பும் அணியாகவே வலம் வரும் பெங்களூரு இந்த வருடம் மீண்டும் அதே தவறை செய்து முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவை மீண்டும் கனவாக்கி வீட்டுக்கு திரும்பியது அந்த அணி ரசிகர்களின் இதயங்களை மீண்டும் உடைத்துயுள்ளது.

Advertisement