இந்தியாவில் இரண்டாவது அலையாக உருமாறி எழுந்துள்ள கொரோனா வைரஸ் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. முன்னர் இல்லாத அளவுக்கு ஒரு நாள் கணக்கில் இந்தியாவில் மூன்று லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்பொழுது ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரி சூழ்நிலையில் இந்த போட்டிகள் அவசியம்தானா என்று சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதில் ஆச்சரியமாக நேற்று ஆடம் கில்கிறிஸ்ட் ஒரு மிகப்பெரிய கேள்வியை தனது பதிவின் மூலம் எழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டி முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஆடம் கில்கிறிஸ்ட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா என்னை வருத்தமடையச் செய்துள்ளது. இந்த அளவுக்கு கொரோனா இந்திய மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது சரிதானா, ஒருவேளை மக்களை திசை திருப்பவே இந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எப்பொழுதும் எனது பிரார்த்தனைகள் இந்திய மக்களுக்காக இருந்து கொண்டே இருக்கும் என்றும் உணர்ச்சிபூர்வமான பதிவை நேற்று அவர் பதிவிட்டார்.
Best wishes to all in India 🇮🇳 Frightening Covid numbers. #IPL continues. Inappropriate? Or important distraction each night? Whatever your thoughts, prayers are with you. 🙏
— Adam Gilchrist (@gilly381) April 24, 2021
அவரது பதிவை மேற்கோளிட்டு அவர் கூறுவது சரி இந்த மாதிரி சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவது மிக மிக தவறு என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு முன்பாகவே இரண்டு வீரர்கள் ( படிக்கல் மற்றும் அக்ஷர் பட்டேல் ) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னர் மீண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மறுபக்கம் இந்திய மக்கள் கொரோனா தொற்றால் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர் அவர்களுக்கு நேரம் செலவிட சிறிது பொழுதுபோக்கு அம்சம் தேவை. அதன் அடிப்படையில் ஐபிஎல் போட்டிகள் அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகள் நடத்துவதன் மூலம் மக்கள் அவ்வளவாக வெளியே செல்ல மாட்டார்கள் என்றும் சோகத்தில் முடங்கி இருக்கும் ஒரு சிலருக்கு அது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்றும் ஒருசிலர் கூறிவருகின்றனர்.