IND vs AUS : இந்தியா அதுல பலவீனமா இருக்காங்க, அதான் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்குறாங்க – கவாஸ்கர் அதிரடியான கருத்து

- Advertisement -

உலகின் டாப் 2 டெஸ்ட் கிரிக்கெட் அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் தோற்றதால் கடைசி போட்டியில் வென்றால் தான் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் உள்ளது. முன்னதாக இத்தொடரில் இந்தியா வெல்வதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டியில் படுதோல்விகளை சந்தித்ததால் கிண்டல்களுக்கு உள்ளானது. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியா படுதோல்வி சந்தித்ததால் தற்போது நிறைய இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இந்தியாவில் உள்ள பிட்ச்களின் தரத்தை விமர்சித்து வருகிறார்கள்.

IND vs AUS Indore Pitch

- Advertisement -

ஏனெனில் நாக்பூர் மற்றும் டெல்லியை விட இந்தூரில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே 4.8 டிகிரி அளவுக்கு தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட எந்த இந்திய பேட்ஸ்மேன்களாலும் தாக்குப் பிடிக்க முடியாதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. அதனால் அதிருப்தியடைந்த ஐசிசி இந்தூர் பிட்ச் மோசம் என்று ரேட்டிங் வழங்கி அதற்கு தண்டனையாக 3 கருப்பு புள்ளிகளை கொடுத்தது. அத்துடன் என்ன தான் இந்தியாவில் சுழல் இருப்பது இயற்கை என்றாலும் அதற்காக முதல் நாளிலேயே சுழல்வது நிச்சயமாக பெரும்பாலான இந்திய ரசிகர்களையே அதிருப்தியடைய வைத்துள்ளது.

கவாஸ்கர் பல்டி:
இருப்பினும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தயாராகும் வகையில் அகமதாபாத் மைதானத்தில் வேகத்துக்கு சாதகமான பிட்ச் அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப் போவதாக 3வது போட்டிக்கு முன் தெரிவித்த கேப்டன் ரோஹித் சர்மா போட்டியின் முடிவில் சொந்த மண் சாதகத்தை பயன்படுத்துவதற்காக தாங்கள் தான் சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைக்க சொல்வதாக விமர்சனங்களுக்கு வெளிப்படையாக பதிலளித்தார். அதனால் இப்போதெல்லாம் இந்தியாவில் 3 நாட்கள் தாண்டாத அளவுக்கு தாறுமாறாக சுழலும் பிட்ச்கள் இந்திய அணி நிர்வாகத்தின் கோரிக்கைப்படி அமைக்கப்படுவது தெளிவாக தெரிய வந்துள்ளது.

Jadeja-1

இந்நிலையில் பும்ரா போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாத காரணத்தால் இந்தியாவின் பந்து வீச்சு துறை பலமாக இல்லை என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் அதனாலேயே தங்களது பலமான சுழலை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற எண்ணத்துடன் இந்திய அணி நிர்வாகம் சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைக்க விரும்புவதாக கூறியுள்ளார். அத்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இதை விட்டால் இந்தியாவுக்கு வேறு வழி தெரியாது என்று வெளிப்படையாக கூறியுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் சுலபமானதல்ல. இந்திய பிட்ச்களில் பும்ரா – ஷமி போன்ற கருப்பு குதிரை பவுலர்கள் இல்லாமல் முகமது சிராஜ் போன்ற அனுபவமற்ற வீரர்கள் இருப்பது எந்த வகையிலும் இந்திய அணியின் பந்து வீச்சு கூட்டணியை பலமாக்காது. ஆனால் சற்று காய்ந்த பிட்ச் உதவியுடன் இந்தியா 20 விக்கெட்டுகளை எடுக்கும். இதனால் தான் இந்தியா சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைகிறது என்று நினைக்கிறேன். அவர்களுக்கு இதை விட்டால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வேறு வழியும் தெரியாது”

Gavaskar

“ஒருவேளை உங்களிடம் வலுவான பந்து வீச்சு கூட்டணி இருந்தால் சற்று வித்தியாசமானதை செய்ய முடியும். ஆனால் உங்களுடைய பலம் ஸ்பின்னர்களாக இருக்கும் காரணத்தாலேயே இந்த வகையான பிட்ச்கள் அமைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். அதனால் தான் பிளாட்டான பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. மாறாக இந்த பிட்ச்கள் பேட்ஸ்மேன்களின் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : நிலக்கரி அள்ளும் தொழிலாளி மகனான அவருக்கு சிறப்பாக செயல்பட்டும் வாய்ப்பு மறுப்பது ஏன்? டிகே ஆதங்க கேள்வி

முன்னதாக பிட்ச் விவகாரத்தில் ஆரம்பத்திலேயே விமர்சித்த ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவை பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்று பதிலடி கொடுத்த சுனில் கவாஸ்கர் இந்தூர் பிட்ச்க்கு மோசம் என ரேட்டிங் வழங்கிய ஐசிசிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அப்படியே நேர்மாறாக இந்திய அணிக்கு எதிராக அவர் பேசியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

Advertisement