போன வருசம் நடந்ததை மனதில் வைத்து டீம் செலக்ட் பண்ணுங்க – இந்தியாவுக்கு அக்தர் எச்சரிக்கை

INDvsPAK
- Advertisement -

கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியாவும் பாகிஸ்தானும் அனல் பறக்கும் மோதிக்கொள்ளும் பரம எதிரிகளாக பார்க்கப்படுகின்றனர். அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டில் மோதும் போது அதை சாதாரண விளையாட்டு போட்டியாக கருதாமல் கௌரவப் பிரச்சனையாக நினைப்பதால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் முழு மூச்சுடன் போராடுவார்கள். அதனால் இவ்விரு அணிகள் மோதும் பெரும்பாலான போட்டிகளில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அனல் பறக்கும்.

- Advertisement -

இருப்பினும் சமீப காலங்களாக எல்லை பிரச்சனை காரணமாக நேருக்கு நேர் போட்டிகளில் மோதுவதை அறவே தவிர்த்துள்ள இந்த இரு நாடுகளும் ஐசிசி நடத்தும் உலக கோப்பை, ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மட்டும் மோதுகின்றன. அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அரிதாக நடப்பதால் அதை இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் பார்க்கிறது. அந்த சூழலில் என்னதான் தரமான வீரர்களை கொண்டிருந்தாலும் உலக கோப்பை என்று வந்தால் அபாரமாக செயல்பட்டு பாகிஸ்தானை அடக்கி ஆட்சி செய்த இந்தியா ராஜாங்கம் நடத்தி வந்தது.

2021 வரலாற்று தோல்வி:
1992 முதல் நடைபெற்ற 50 ஓவர் மற்றும் 20 ஓவர் என அனைத்து உலக கோப்பைகளிலும் பாகிஸ்தானை பதம்பார்த்த இந்தியா தொடர்ச்சியாக வென்று வந்தது. அதனால் உலக கோப்பையை வெல்லா விட்டாலும் எப்படியாவது இந்தியாவிற்கு எதிராக வென்றே தீரவேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் களமிறங்கி வந்த பாகிஸ்தான் ஒரு வழியாக அந்தத் தொடர் தோல்விகளுக்கு கடந்த 2021இல் முற்றுப்புள்ளி வைத்தது. ஆம் துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பந்துவீச்சில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரையும் திணறடித்த பாகிஸ்தான் பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று தோல்வியை இந்தியாவுக்கு பரிசளித்தது.

INDvsPAK

அதனால் பெரிய அவமானத்தை சந்தித்த போதிலும் தங்களை தோற்கடிக்க சுமார் 30 வருடங்கள் தேவைப்பட்டதை நினைத்து இந்திய ரசிகர்கள் பெருமை கொள்கின்றனர். அந்த குறிப்பிட்ட போட்டியில் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத ஹர்திக் பாண்டியா, அனுபவமில்லாத வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நம்பி தேர்வு செய்யப்பட்ட போதிலும் சிறப்பாக செயல்படாதது தோல்வியை பரிசளித்தது. இருப்பினும் அதை மறக்காத இந்தியா அடுத்ததாக வரும் அக்டோபர் 23-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலக கோப்பையில் எதிர்கொள்ளும்போது சிறப்பாக செயல்பட்டு தோல்வியை பரிசளித்து பழி தீர்க்க தயாராகி வருகிறது.

- Advertisement -

தோல்வியை மறக்காதீங்க:
அதற்காக விரைவில் சொந்த மண்ணில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களில் தரமான வீரர்களை தேர்வு செய்ய தேர்வு குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வருடம் பெற்ற தோல்வியை மனதில் வைத்துக்கொண்டு சுமாரான அணியை தேர்வு செய்யாமல் தரமான அணியைத் தேர்வு செய்தால் மட்டுமே பாகிஸ்தானிடம் தாக்குபிடிக்க முடியும் என்று இந்திய தேர்வு குழுவுக்கு முன்னாள் வீரர் சோயப் அக்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Akhtar

கடந்த காலங்களில் பாகிஸ்தானை குறைத்து எடை போட்டு சுமாரான இந்திய அணியை தேர்வு செய்ததுபோல் இம்முறை செய்ய வேண்டாம் என்று கூறிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் வேலையை தீர்மானிக்காமல் ஏதோ ஒரு அணியை தேர்வு செய்ய முடியாது. தேர்வுக் குழுவினர் கவனமாக தேர்வு செய்து முழுமையாக நம்பும் அளவுக்கு திடமான அணியை உருவாக்க வேண்டும்.

- Advertisement -

இந்த முறை பாகிஸ்தானை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமாக இருக்காது. ஒருவேளை அவர்கள் நல்ல அணியை தேர்வு செய்தால் நிச்சயம் பாகிஸ்தானை தோற்கடிக்க வாய்ப்புள்ளது. இந்த இரு அணிகளுமே சமமாக இருப்பதால் தற்போது வெற்றியாளரை பற்றி கணிப்பது கடினமாகும் ” என்று கூறினார்.

fans 1

அடுத்தாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் முறையாக ஒரு உலக கோப்பை போட்டியில் மோதுகின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதால் பாகிஸ்தானுக்கும் நிச்சயமாக அப்போட்டி சவாலை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 சீசனில் கோப்பையை வெல்ல ஆர்சிபி கழற்றிவிட வேண்டிய வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “மெல்போர்ன் மைதான பிட்ச் சிறப்பாக இருக்கும். 2-வதாக பந்துவீச தீர்மானிப்பது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு வெற்றியை கொடுக்க நல்ல வாய்ப்பாக அமையும். அங்கு இருக்கப்போகும் 1,00,000 ரசிகர்களில் 70,000 பேர் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதால் பாகிஸ்தானுக்கும் அழுத்தம் உள்ளது” என்று கூறினார்.

Advertisement