ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் 2வது செமி ஃபைனலில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. நேற்று நவிமும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 49.5 ஓவரில் 338 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக போப் லீச்பீல்ட் 119, ஆஸ்லே கார்ட்னர் 63 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஸ்ரீசரிணி 2, தீப்தி சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய இந்தியா ஆரம்பம் முதலே போராட்டமாக விளையாடி 48.3 ஓவரில் 341/5 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிகஸ் 121*, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 89, தீப்தி தீப்தி 24, ஸ்மிரிதி மந்தனா 24, ரிச்சா கோஸ் 26 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கிம் கார்த் 2, அனபல் சதர்லாந்து 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
வரலாறு காணாத சேசிங்:
முன்னதாக மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா ஒருமுறை கூட 200+ ரன்கள் வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. எனவே 7 முறை உலகக் கோப்பைகளை வென்ற நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இப்போட்டியில் இந்தியா தோற்கும் என்பதே பலருடைய கணிப்பாக இருந்தது. ஆனால் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்தியா இப்போட்டியில் 339 ரன்களை சேசிங் செய்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது.
இதன் வாயிலாக ஒரு ஐசிசி உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற வரலாறு காணாத உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் ஆடவர் அல்லது மகளிர் ஐசிசி உலகக் கோப்பையிலும் எந்த அணியும் 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்வதில்லை.
ஆஸியின் வெற்றி நடையை உடைத்த இந்தியா:
2015 ஆடவர் உலகக் கோப்பையில் ஆக்லாந்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான செமி ஃபைனலில் நியூசிலாந்து 298 ரன்களை சேசிங் செய்து வென்றதே முந்தைய அதிகபட்சமாகும். அத்துடன் 2022 முதல் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து 15 போட்டிகளில் வென்று வந்தது. அதனால் மகளிர் உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற அணி என்ற உலக சாதனையுடன் ஆஸ்திரேலியா வெற்றி நடை போட்டு வந்தது.
இதையும் படிங்க: அழாம இருக்க முடியல.. இந்தியாவை ஜெய்க்க வைக்க இதான் காரணம்.. மனஉளைச்சல் பண்ணிட்டாங்க.. ஜெமிமா பேட்டி
அந்த உலக சாதனை வெற்றி நடையை இப்போட்டியில் உடைத்துள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியாவை மகளிர் உலகக் கோப்பை செமி ஃபைனலில் 2 முறை (2017, 2025*) தோற்கடித்த ஒரே அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2011 போல உலகக் கோப்பையை வெல்ல சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல இந்திய மகளிரணி தயாராகி வருகிறது.


