தவறு என்மேல் தான் – ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்ததற்கு ஹர்பஜன் சிங் வருத்தத்துடன் பேசியது இதோ

Sreesanth
- Advertisement -

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் வரலாற்றில் இந்தியா கண்டெடுத்த ஒரு மகத்தான ஆப் ஸ்பின் பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலராக சாதனை படைத்துள்ள அவர் 2007, 2011 ஆகிய உலகக் கோப்பைகளை வென்ற இந்திய அணியில் சுழல் பந்துவீச்சு துறையில் துருப்புச் சீட்டாக செயல்பட்டார். அதேப்போல் ஐபிஎல் தொடரிலும் மும்பை, சென்னை போன்ற அணிகளில் விளையாடி சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள அவர் இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு சாதித்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அவரது வாழ்நாளில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமன்சை குரங்கு என திட்டி சர்ச்சையில் சிக்கிய அவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப் பெரிய கருப்பு புள்ளியை ஏற்படுத்தினார். அதைப்போல் ஐபிஎல் தொடரில் அதுவும் முதல் சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய போது பஞ்சாப் அணிக்காக விளையாடிய கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்து மேலும் ஒரு சர்ச்சையை உண்டாக்கினார்.

ஸ்ரீசாந்த் சர்ச்சை:
ஆம் மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதிய ஒரு போட்டியின் முடிவில் ஸ்ரீசாந்த் அழுது கொண்டிருந்ததை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதனால் பஞ்சாப் உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா உட்பட பஞ்சாப் அணியினர் அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது ஹர்பஜன்சிங் தம்மை கன்னத்தில் அறைந்ததாக அழுது கொண்டே தெரிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூட வெளிநாட்டவர் என்ற நிலையில் ஸ்ரீசாந்த் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்.

மேலும் இருவரும் அதற்கு முன் 2007 டி20 உலக கோப்பையிலும் இணைந்து நாட்டுக்காக விளையாடியுள்ளார்கள். ஆனாலும் ஏதோ ஒரு காரணத்துக்காக எல்லை மீறிய ஹர்பஜன்சிங் அவரின் கன்னத்தில் அறைந்தது ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் அந்த குறிப்பிட்ட போட்டியில் கேப்டனாக இருந்த ஹர்பஜன்சிங் எஞ்சிய ஐபிஎல் தொடரில் மொத்தமாக தடைசெய்யப்பட்டதால் ஷான் பொல்லாக் மும்பையின் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

- Advertisement -

ஹர்பஜன் வருத்தம்:
அதன்பின் மேலும் பகையை வளர்க்காமல் நட்பு பாராட்டிய அவர்கள் இந்தியாவிற்காக இணைந்து விளையாடி குறிப்பாக 2011 உலக கோப்பையில் மீண்டும் சேர்ந்து விளையாடி நண்பர்களாகி விட்டார்கள். அந்த மோசமான தருணம் நிகழ்ந்து 15 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அந்த குறிப்பிட்ட நாளில் தன் மீதுதான் தவறு என்று ஹர்பஜன் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த நாளில் அவசரப்படாமல் பொறுமையுடன் இருந்திருந்தால் ஸ்ரீசாந்துக்கு அந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.

Harbhajan

இது பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “என்ன நடந்ததோ அது தவறானது. நான் ஒரு தவறு செய்துவிட்டேன். என்னால் சக வீரர் ஒரு சங்கடத்தை சந்திக்க நேரிட்டது. அதற்காக நான் வெட்கப்பட்டேன். எனது வாழ்நாளில் ஒரு தவறை நான் சரி செய்திருக்க வேண்டும் என்றால் அது களத்தில் ஸ்ரீசாந்தை அப்படி நடத்தியதாக இருக்கும். அன்று அது நடந்திருக்கக் கூடாது. அதை நினைக்கும்போது தேவையில்லாதது என்று இப்போது உணர்கிறேன்” என்று பேசினார். இருப்பினும் அந்த நாளில் என்ன நடந்தது, என்ன தவறு செய்தேன் என்பது பற்றி ஹர்பஜன்சிங் எதுவும் பேசவில்லை.

- Advertisement -

அதேபோல் ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்ததையும் மறந்த ஸ்ரீசாந்த் நாளடைவில் அவருடன் ஒன்று சேர்ந்து தற்போது நண்பர்களாக இருக்கிறார். அதற்கு சச்சின் டெண்டுல்கர் தான் உதவியதாக தெரிவித்த அவர் இதுபற்றி ஏற்கனவே அளித்த பழைய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அவை அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டன. அதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி. அவர் என்னிடம் நீங்கள் இருவரும் ஒரே அணிக்காக விளையாடுகிறீர்கள் என்று சமாதானப் படுத்தினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்து அவரை நேரில் சென்று பார்த்து உணவு அருந்தி மனம் விட்டு பேசினேன். ஆனால் ஊடகங்கள் அதை வேறு கோணத்தில் எடுத்துச் சென்றுவிட்டன”

இதையும் படிங்க : டி20 வேர்ல்டுகப்புக்கு முன்னாடி பாண்டியாவை விளையாட வைக்காதீங்க – ரவி சாஸ்திரி தடாலடி

“ஹர்பஜன் சிங்கிடம் தற்போது நான் நல்ல உறவில் உள்ளேன். அவர் தற்போது நிறைய மாறி விட்டார். மேலும் அவர் பொதுவான இடத்தில் “ஸ்ரீ எங்கிருந்தாலும் நீ என்னை மன்னித்துவிடு” என்று என்னிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார். அந்த வகையில் அவர் எப்போதும் எனக்கு மூத்த சகோதரரை போன்றவர். அந்த குறிப்பிட்ட தருணத்தில் வேண்டுமானால் அவர் அப்படி நடந்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் லெஜெண்ட் போன்றவர்” என்று தெரிவித்திருந்தார்.

Advertisement