IND vs IRE : முதல் போட்டியிலேயே வேறு எந்த கேப்டனும் படைக்காத புதிய வரலாற்று சாதனை – விவரம் இதோ

Hardik-Pandya
- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. ஜூலை 1இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதால் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உட்பட முக்கிய வீரர்கள் இல்லாத இந்த தொடரில் ஏறக்குறைய சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் அசத்திய வீரர்களுடன் ஐபிஎல் 2022 கோப்பையை மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார். பயிற்சியாளராக ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மேற்பார்வையில் ஜூன் 26-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

IND vs IRE

- Advertisement -

இந்தியாவுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக் அறிமுக வாய்ப்பை பெற்ற நிலையில் தீபக் ஹூடா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் 9 மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி மழையால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமானது. நல்ல வேளையாக 11.20 மணிக்கு மழை நின்று விட்டதால் தலா 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு துவங்கிய இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் போராடி 108/4 ரன்கள் சேர்த்தது.

இந்தியா அதிரடி:
பால் ஸ்டர்லிங் 4 (5), கேப்டன் ஆண்டி பால்பிரிண் 0 (2), கெரத் டிலாணி 8 (9) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 22/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த டெக்டர் – டூக்கர் ஆகியோர் 4-ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். அதில் பொறுமையாக பேட்டிங் செய்த டுக்கர் 18 (16) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கிய ஹென்றி டெக்டர் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 64* (33) ரன்கள் குவித்து காப்பாற்றி நல்ல பினிஷிங் கொடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா, புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Bhuvi 1

அதனால் 109 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ருதுராஜ் லேசான காயமடைந்ததால் தீபக் ஹூடா – இஷான் கிசான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்தனர். அதில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் இஷான் கிஷான் 26 (11) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 30/2 என தடுமாறிய இந்திய அணிக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 1 பவுண்டரி 3 சிக்சருடன் 24 (12) ரன்கள் எடுத்து வெற்றி உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பொறுப்பான பாண்டியா:
மறுபுறம் நங்கூரமாக அற்புதமாக பேட்டிங் செய்த தீபக் ஹூடா 6 பவுண்டரி 2 சிக்சருடன் 47* (29) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருக்க அவருடன் தினேஷ் கார்த்திக் 5* (4) ரன்கள் எடுத்ததால் 9.2 ஓவரிலேயே 111/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. அதனால் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. இந்த வெற்றிக்கு துல்லியமாக பந்துவீசி 1 விக்கெட் எடுத்த சஹால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

pandya (2)

இந்த போட்டியில் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அந்தப் பொறுப்பில் அற்புதமாக செயல்பட்டார் என்றே கூறலாம். முதலில் சமீபத்தில் தென் ஆப்ரிக்க தொடரில் 5 டாஸ் தோற்ற ரிஷப் பண்ட் போல் அல்லாமல் முதல் போட்டியிலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற அவர் சமீப காலங்களில் பந்துவீச தடுமாறிய போதிலும் கேப்டன் பொறுப்பை உணர்ந்து 2 ஓவர்கள் வீசி அயர்லாந்தின் மிரட்டல் தொடக்க வீரர் பால் ஸ்டெர்லிங்கை 4 ரன்களில் காலி செய்தார். அதேபோல் பேட்டிங்கிலும் பொதுவாக மிடில் ஆர்டரில் களமிறங்கும் அவர் கேப்டன் பொறுப்புடன் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 30/2 என தடுமாறிய இந்தியாவை மேலும் சரிய விடாமல் தீபக் ஹூடாவுடன் இணைந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டலாக 24 (12) ரன்களை தெறிக்க விட்டு வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

புதிய சாதனை:
அதேபோல் இளம் வீரர்களை அற்புதமாக வழிநடத்திய அவர் பந்து வீச்சாளர்களை சரியான தருணங்களில் பயன்படுத்தி ஐபிஎல் 2022 தொடரில் எப்படி மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்தி கோப்பையை வென்று காட்டினாரோ அதேபோல் இந்தியாவுக்கு முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs IRE : அயர்லாந்திலும் அசத்திய நம்ம புவி – சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலகசாதனை

1. அதைவிட இப்போட்டியில் கேப்டனாக பந்துவீசிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக பந்து வீசிய இந்திய கேப்டன் மற்றும் முதல் விக்கெட்டை எடுக்க இந்திய கேப்டன் என்ற 2 புதிய வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார். இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 1932இல் அப்போதைய கேப்டன் சிகே நாயுடு முதல் முறையாக பந்து வீசியிருந்தார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 1975இல் வெங்கட்ராகவன் முதல் முறையாக கேப்டனாக பந்து வீசினார்.

2. கடந்த 2006 முதல் டி20 போட்டிகளில் பங்கேற்று வரும் இந்தியாவுக்கு இதுநாள் வரை வேறு எந்த இந்திய கேப்டனும் பந்துவீசியதே கிடையாது என்ற நிலையில் அவர் இந்த சாதனை படைத்துள்ளார்.

Advertisement