உலகிலேயே மன்கட் ரன் அவுட்டை தவிர்க்க நியூசி வீரர் அறிமுகப்படுத்திய புதிய ஐடியா – குவியும் பாராட்டுக்கள்

Glenn Phllips SL vs SL
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 29ஆம் தேதியன்று நடைபெற்ற 27வது லீக் போட்டியில் ஆசிய சாம்பியன் இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதின. புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் போராடி 167/7 ரன்கள் சேர்த்தது. ஏனெனில் அந்த அணிக்கு ஃபின் ஆலன் 1, டேவோன் கான்வே 1, கேப்டன் கேம் வில்லியம்சன் 8 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அதனால் 15/3 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்ற நியூசிலாந்துக்கு கிளென் பிலிப்ஸ் உடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெயருக்காக விளையாடிய டார்ல் மிட்சேல் 22 (24) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாக மாறிய கிளன் பிலிப்ஸ் நேரம் செல்லசெல்ல அதிரடியை அதிகப்படுத்தி 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 104 (64) ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் வாயிலாக டி20 உலக கோப்பையில் பிரண்டன் மெக்கல்லமுக்கு பின் சதமடித்த 2வது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

- Advertisement -

சூப்பர் ஐடியா:
அதை தொடர்ந்து 168 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிஷாங்கா 0, குசன் மெண்டிஸ் 4, டீ சில்வா 0, அஸலங்கா 4, கருணரத்னே 3 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 24/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் பானுக்கா ராஜபக்சா அதிரடியாக 34 (22) ரன்களும் கேப்டன் சனாக்கா 35 (32) ரன்களும் எடுத்து போராடி அவுட்டானார்கள். இறுதியில் 19.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை வெறும் 102 ரன்களுக்கு சுருண்டு நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை குறைத்துக் கொண்டது.

மறுபுறம் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 3 போட்டியில் 2வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிக்கு ட்ரெண்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய நிலையில் சதமடித்த கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக 15/3 என்ற நிலையில் களமிறங்கிய அவர் கடைசி நேரத்தில் வேகவேகமாக ரன்கள் சேர்த்த போதும் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெளியேறுவதை தவிர்க்க பயன்படுத்திய டெக்னிக் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

- Advertisement -

ஆம் பவுலர் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து கிரீஸ் விட்டு வெளியேறினால் மன்கட் என்றழைக்கப்பட்ட ரன் அவுட் செய்வது சமீப காலங்களில் பெரிய சர்ச்சையாக பேசப்படுகிறது. அந்த நிலையில் இப்போட்டியில் கடைசி ஓவரை மிட்சேல் சாட்னர் எதிர்கொண்ட நிலையில் எதிர்புறமிருந்த கிளன் பிலிப்ஸ் ஓட்டப்பந்தயத்தில் ஒரு தடகள வீரர் எப்படி ஓடுவதற்கு தயாராக உட்கார்ந்திருப்பாரோ அதே போல் தனது பின்னங்காலை மட்டும் வெள்ளை கோட்டுக்கு உள்ளே வைத்து எஞ்சிய உடைலை வெள்ளை கோட்டுக்கு வெளியே வைத்து ஓடுவதற்கு தயாராக குனிந்தவாரே நின்றார்.

அதே சமயம் ஓரக்கண்ணால் பவுலர் பந்தை கையிலிருந்து வெளியிட்டதும் தடகள வீரர் வேகமாக ஓடுவதைப் போல ஓட்டம் பிடிக்கும் அவர் ஒருசில நொடிகளிலேயே எதிர்புறத்தை எளிதாக தொட்டார். சொல்லப்போனால் நின்றவாறு ஓடினால் கூட இவ்வளவு வேகமாக ரன் எடுக்க முடியாது என்றே கூறலாம். இதனால் விதிமுறையை பின்பற்றுவதுடன் வேகமாக ரன் எடுப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதாவது ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல் அவருடைய இந்த புதிய டெக்னிக் அமைந்துள்ளது ரசிகர்களைக் கவர்ந்து பாராட்ட வைத்துள்ளது.

அதனால் விதண்டாவாதம் பேசாமல் இவரை போல் இதர வீரர்களும் குறிப்பாக இங்கிலாந்தினர் பின்பற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதை விட ஜமைக்காவின் பிரபல தடகள வீரர் உசைன் போல்ட்டுக்கு டப் கொடுக்கும் வகையில் இந்த டெக்னிக் உள்ளதாக கிளன் பிலிப்ஸை முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிசப் பாராட்டியுள்ளார்.

Advertisement