இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். 2021இல் நியமிக்கப்பட்டு கடந்த வருடம் நீட்டிக்கப்பட்ட அவருடைய பதவி காலம் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையுடன் நிறைவுக்கு வருகிறது. எனவே அடுத்த பயிற்சியாளரை நியமிப்பதற்காக விண்ணப்பங்களை வரவேற்ற பிசிசிஐ ஸ்டீபன் பிளமிங், ரிக்கி பாண்டிங் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் முன்னாள் வீரர்களை நியமிக்க விரும்பியதாக செய்திகள் காணப்பட்டது.
அந்த நேரத்தில் ஆலோசகராக வந்ததும் கௌதம் கம்பீர் தலைமையில் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. மேலும் 2007, 2011 உலகக்கோப்பை ஃபைனல்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஏராளமான அனுபவத்தையும் கொண்டுள்ளார். எனவே புதிய பயிற்சியாளராக அவரை நியமனம் செய்ய பிசிசிஐ அணுகியதாக செய்திகள் வந்தன.
பயிற்சியாளராக கம்பீர்:
சொல்லப்போனால் 2024 ஐபிஎல் முடிந்ததும் சென்னையில் அவருடன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதனால் கௌதம் கம்பீர் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது உறுதியானதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இறுதிக்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் 140 கோடி இந்தியர்களை பிரதிபலிக்கும் அணியின் பயிற்சியாளராக வருவதற்கு யார் தான் யார் தான் விரும்ப மாட்டார்கள் என்று கம்பீர் கூறியுள்ளார்.
எனவே அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “நான் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு விரும்புகிறேன். உங்களுடைய தேசிய அணியின் பயிற்சியாளராக இருப்பதை விட வேறு பெரிய கௌரவம் இருக்க முடியாது. ஏனெனில் நீங்கள் 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக இருப்பீர்கள்”
“எனவே இந்தியாவின் பிரதிநிதியாக இருப்பதை விட வேறு என்ன பெரிதாக இருக்க முடியும். உண்மையில் இந்தியாவுக்காக நான் உலகக் கோப்பையை வெல்வதற்கு உதவப் போவதில்லை. 140 கோடி இந்தியர்கள் தான் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு உதவுவார்கள். எங்களுக்காக அனைவரும் வேண்டிக்கொண்டால் அவர்களுக்காக நாங்கள் விளையாடத் துவங்கினால் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்”
இதையும் படிங்க: அப்படியெல்லாம் ஒன்னும் கட்டாயமில்ல.. தகுதியான விராட் கோலிக்கு அந்த வாய்ப்பை கொடுங்க.. கவாஸ்கர் கருத்து
“அதற்கு மிகவும் முக்கியமாக பயமின்றி விளையாட வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பை முடிந்ததும் அடுத்த பயிற்சியாளருக்கான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது. அது கௌதம் கம்பீராக இருக்க பிரகாசமான வாய்ப்புள்ளது. அதற்கு கங்குலி, தினேஷ் கார்த்திக் போன்ற முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



