IND vs SL : அதை செய்யாம நீங்க சர்வதேச கிரிக்கெட்டுக்கு விளையாட வந்திருக்க கூடாது – நோ பால் போட்ட அர்ஷ்தீப்பை விளாசிய கம்பீர்

Arshdeep SIngh No Ball Gautam Gambhir
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. புனேவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிசாங்கா 33, குசால் மெண்டிஸ் 52, அஸலங்கா 37, சனாக்கா 56* ஆகியோரது அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 206/6 ரன்கள் குவித்து மிரட்டியது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு இஷான் கிசான் 2, சுப்மன் கில் 5, ராகுல் திரிபாதி 5, கேப்டன் பாண்டியா 12, தீபக் ஹூடா 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

IND vs SL Axar PAtel

அதனால் 57/5 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 6வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற போராடிய சூரியகுமார் யாதவ் 51 (36) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் 3 பவுண்டரி 6 சிக்சர்களை பறக்க விட்டு வெற்றிக்கு போராடிய அக்சர் படேல் 65 (31) ரன்களிலும் சிவம் மாவி 26 ரன்களிலும் போராடி கடைசி ஓவரில் அவுட்டானார்கள். அதனால் 20 ஓவர்களில் 190/8 மட்டுமே ரன்களை எடுத்த இந்தியா இத்தொடரை வெல்ல கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

தவறான செலெக்ஷன்:
முன்னதாக இப்போட்டியில் மோசமான பவுலிங் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக 2வது ஓவரை வீசிய அர்ஷிதீப் சிங் ஹாட்ரிக் நோ-பால் உட்பட 12 பந்துகளில் 5 நோ-பால்களை வீசி மோசமான உலக சாதனை படைத்து 37 ரன்களை கொடுத்தது கையிலிருந்த வெற்றியை இலங்கைக்கு பரிசளித்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவர் இத்தொடரின் முதல் போட்டியில் லேசான காயத்தால் பங்கேற்கவில்லை.

Arshdeep SIngh No Ball

ஆனால் குணமடைந்ததும் போதிய பயிற்சிகள் இல்லாமல் தேவையானயளவு கிரிக்கெட் விளையாடாமல் இப்போட்டியில் களமிறங்கியதே அடுத்தடுத்த நோ-பால்களை வீசியதற்கு முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்தில் கடைசியாக விளையாடியிருந்த அவர் உள்ளூர் அளவில் விளையாடாத நிலையில் காயத்தை சந்தித்து தற்சமயத்தில் நல்ல ரிதமில் இல்லை என்று தெரிந்தும் அணி நிர்வாகம் அவரை தேர்வு செய்தது தவறு என்று தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“7 நோ-பால்கள் என்பது நீங்கள் 21 ஓவர்களை வீசியதற்கு சமமாகும். பொதுவாக அனைவரும் மோசமான பந்துகள் அல்லது ஷாட்களில் ஈடுபடுவது வழக்கமாகும். ஆனால் இவை அனைத்தும் ரிதத்தை பொறுத்தது. குறிப்பாக நீங்கள் காயத்திலிருந்து வரும் போது நேரடியாக சர்வதேச போட்டியில் விளையாட கூடாது. மாறாக உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று பார்முக்கு திரும்பி வரவேண்டும். ஏனெனில் இது போன்ற நோ-பால்களை எந்த காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர் மட்டுமல்ல காயமடையும் யாராக இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று 15 – 20 ஓவர்களை வீசி விட்டு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விளையாட வாருங்கள்”

Gambhir

“அதனால் தான் இன்றைய நாளில் அர்ஷிதீப் மிகவும் தடுமாறினார். ஏனெனில் அவர் உள்ளூர் அளவில் விளையாடாமல் வலை பயிற்சியில் மட்டும் விளையாடி விட்டு இங்கு வந்ததால் இந்த சொதப்பல் அரங்கேறியது. எனவே இவை அனைத்தும் பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்தை பொறுத்தது. இது போல் காயமடைந்து வரும் வீரர்களுக்கு நீங்கள் கடினமான பயிற்சிகளை கொடுக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற நோ-பால்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி வீசினால் உங்களது கேப்டனும் சரியான பீல்டிங் செட்டிங் செய்ய முடியாது. அதுவும் 7 நோ-பால்களில் 30 ரன்கள் கொடுத்தால் வெற்றியின் நிச்சயம் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்” என்று கூறினார்.

இதையும் படிங்கபேசாம சின்ன பசங்களுக்கு பதிலா சீனியர்கள எடுத்திருக்கலாமோ – சொதப்பிய இந்திய பவுலிங் பற்றி ராகுல் டிராவிட் பேசியது என்ன

அவர் கூறுவது போல காயமடைந்து வீரர்கள் முதலில் தேவையான பயிற்சிகளை எடுத்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் நட்சத்திர அந்தஸ்தை பார்த்து சமீப காலங்களில் நேரடியாக இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகி விட்டது. எடுத்துக்காட்டாக பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து உள்ளூர் போட்டியில் விளையாடாமலே இந்திய அணிக்கு தேர்வானார்கள். அதனால் முழுமையான ஃபார்ம் மற்றும் ரிதத்துக்கு வரும் முன்னறே அவர்கள் காயமடைந்து மீண்டும் வெளியேறினார்கள்.

Advertisement