உலக கோப்பை தொடரின் 20 ஆவது போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 334 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் பின்ச் 153 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 73 ரன்களை அடித்தார். அதன் பின்னர் 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி.
45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்சல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிறப்பாக விளையாடி சதம் அடித்த பின்ச் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறியதாவது: நாங்கள் இந்த போட்டியில் எங்களது திட்டத்தை சற்று மாற்றினோம். அதன்படி ஸ்லோவாக விளையாட ஆரம்பித்தோம் பிறகு எங்களால் போட்டியை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. இந்த போட்டியில் மேக்ஸ்வெல் சிறப்பாக பந்து வீசினார். அவர் பந்து வீசுவதை பார்க்கும்போது மிகவும் நன்றாக இருந்தது.

ஏனெனில் இந்த சிறிய மைதானத்தில் பவுண்டரிகளை கொடுக்காமல் அவர் சிறப்பாக பந்து வீசினார். ஸ்டார்க் புது பேட்ஸ்மேன்களை எப்போதும் அச்சுறுத்துவார். அவர் ஒரு உலகத்தரமான பவுலர் என்று என்பதை இந்த போட்டியிலும் நிரூபித்துள்ளார். அவர் அவருடைய வேலையை தொடர்ந்து இந்த உலக கோப்பையில் செய்துவருகிறார். நிச்சயம் இவரின் பந்துவீச்சு எங்கள் அணிக்கு பெரிய சொத்தாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து என்று பின்ச் கூறினார்.



