ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜூலை பத்தாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 66, ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, முஸர்பானி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 159/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக டியோன் மேயர்ஸ் 65* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 2 – 1* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா தொடரை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
ரசிகர்கள் அதிருப்தி:
முன்னதாக இந்தத் தொடரில் பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சுப்மன் கில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போல தாமும் செயல்பட விரும்புவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் இப்போட்டியில் ஜெய்ஸ்வால் அணிக்குள் வந்ததால் அபிஷேக் ஷர்மாவை அவர் 3வது இடத்தில் களமிறக்கியது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏனெனில் அபிஷேக் ஷர்மா இந்தத் தொடரில் தான் அறிமுகமாகி முதல் போட்டியில் டக் அவுட்டானார். இருப்பினும் 2வது போட்டியில் அடித்து நொறுக்கிய அவர் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். மேலும் ஐபிஎல் உட்பட இதுவரை விளையாடிய அனைத்து கிரிக்கெட்டிலும் துவக்க வீரராகவே விளையாடிய அனுபவத்தைக் கொண்டு அவர் சர்வதேச அளவில் முழுமையாக ஒரு தொடரில் கூட விளையாடவில்லை.
மறுபுறம் சுப்மன் கில் கடந்த 2019 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அத்துடன் கடந்த காலங்களில் அவர் 3, 4 ஆகிய இடங்களில் விளையாடிய அனுபவத்தையும் கொண்டுள்ளார். எனவே கேப்டனாக அபிஷேக் ஷர்மாவை அவர் துவக்க வீரராக விளையாட வைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அவர் தான் இந்திய கிரிக்கெட்டின் ஒரிஜினல் டான்.. விராட் கோலி மாதிரி பிளேயர்ஸ் காரணம்.. ஜஹீர் அப்பாஸ் பாராட்டு
ஆனால் அதை செய்யாமல் சுயநலமாக துவக்க வீரராகவே விளையாடிய கில் 134 ஸ்ட்ரைக் ரேட்டில் 66 (48) ரன்கள் குவித்து பவர்பிளே ஓவர்களில் மெதுவாக விளையாடினார். மறுபுறம் வழக்கத்திற்கு மாறாக 3வது இடத்தில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா தடுமாறி 10 (9) ரன்னில் அவுட்டானார். எனவே இப்படி செயல்பட்டால் ரோகித் சர்மா போல வர முடியாது என்று சுப்மன் கில் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.