யாரு சாமி இந்த பூமர் அன்கிள்?  இதுக்கு ரமீஸ் ராஜாவே பரவால்ல போல – புதிய தலைவரை கலாய்க்கும் பாக் ரசிகர்கள், நடந்தது இதோ

Najam Sethi Ramiz Raja
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் பாகிஸ்தான் 2022ஆம் ஆண்டு வரலாறு காணாத தொடர் தோல்விகளை சந்தித்து உலக அளவில் விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களுக்கு உள்ளானது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் மண்ணை கவ்விய அந்த அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர் டெஸ்ட் தோல்விகளை சந்தித்து பெரிய அவமானத்திற்கு உள்ளான அந்த அணி 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பைனலில் தோற்றது.

அது போக தார் ரோடு போல பிட்ச் அமைக்கப்பட்டிருந்ததால் ஒன்றுக்கு 2 முறை கராச்சி கிரிக்கெட் மைதானத்திற்கு 2 கருப்பு புள்ளிகளை தண்டனையாக ஐசிசி வழங்கியது. அப்படி அனைத்து ஏரியாவிலும் அடிவாங்கியதால் அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் ஏமாற்றமடைந்தனர். அதனால் எதிர்பார்க்கப்பட்டது போலவே அதிரடியாக மாற்றங்கள் நிகழ்ந்த பாகிஸ்தான் வாரியத்தில் முதலாவதாக வாயில் மட்டும் பேசிக் கொண்டிருந்த ரமீஷ் ராஜா தலைவர் பதவியிலிருந்து இரவோடு நீக்கப்பட்டு முன்னாள் தலைவர் நஜாம் சேதி பொறுப்பேற்றார்.

- Advertisement -

பூமர் அங்கிள்:
அவரது தலைமையில் 15 பேர் கொண்ட ஒட்டுமொத்த பாகிஸ்தான் வாரியமும் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் தேர்வுக்குழு தலைவரும் அதிரடியாக நீக்கப்பட்டு முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி புதிய தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை பாகிஸ்தான் போராடி டிரா செய்தது. இந்நிலையில் புதிய தலைவராக பொறுப்பேற்ற நஜாம் சேதி ஏற்கனவே 2017 காலகட்டத்தில் தாம் தலைவராக இருந்த போது பாகிஸ்தான் பதிவு செய்த வெற்றிகளை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டுள்ளார்.

இதில் ஆச்சரியப்படும் அம்சம் என்னவெனில் அவருக்கு பின் தலைவர்களாக இருந்த ஈசான் மணி மற்றும் ரமீஷ் ராஜா ஆகியோர் தலைமையில் பாகிஸ்தானின் செயல்பாடுகளையும் புள்ளி விவரங்களுடன் அவர் வெளியிட்டுள்ளார். அதில் 2017 சாம்பியன்ஸ் டிராபி வென்றது, டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது போன்ற சாதனைகள் தாம் தலைவர் பதவியில் இருந்த போது தான் நடந்ததாக நஜாம் சேதி மறைமுகமாக கூறியுள்ளார்.

- Advertisement -

அதே சமையம் ஈசான் மணி தலைமையில் தரவரிசையில் பாகிஸ்தான் அடைந்த வீழ்ச்சியையும் ரமீஸ் ராஜா தலைமையில் மேலும் சந்தித்த வீழ்ச்சியையும் தார் ரோட் போன்ற பிட்ச்சை உருவாக்குவதற்கு 50 கோடி ருபாய் வீணடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மொத்தத்தில் தேர்தலுக்கு மக்களிடம் ஓட்டு கேட்க செல்லும் வேட்பாளரை போல் அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியடைய வைத்துள்ளது.

ஏனெனில் யாரது தலைமையில் நல்லது நடந்தாலும் அதை ரசிகர்கள் மறக்காமல் எப்போதுமே கொண்டாடக் கூடியவர்கள். அந்த நிலைமையில் மற்ற தலைவர்களை விட தாம் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் என்று கூற வரும் அவர் தற்பெருமையும் தற்ப்புகழ்ச்சியையும் அடைவதற்காக இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களே கலாய்க்கிறார்கள். அதை விட மற்ற தலைவர்களுடன் வாய் வார்த்தையாக மட்டுமல்லாமல் புள்ளி விவரத்துடன் ஒப்பிடும் அளவுக்கு இது என்ன விளையாட்டு வாரியம் அல்லது அரசியல் வாரியமா? என்றும் ரசிகர்கள் அவரை கிண்டலடிகிறார்கள்.

இதையும் படிங்கஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் வெளிநாடுகளில் ஷிகர் தவான் அமைத்த டாப் 3 பார்ட்னர்ஷிப் – லிஸ்ட் இதோ

மேலும் தலைவரைப் போல் அல்லாமல் குழந்தைத்தனமாய் தன்னைத் தானே அவர் பெருமை பேசியுள்ளார் என்றும் கிண்டலடிக்கும் ரசிகர்கள் இன்டர்வியூக்கு செல்லும் போது சுயவிவரத்தை சொல்லும் பயோ டேட்டா போல இது இருப்பதாகவும் கலாய்க்கிறார்கள். அத்துடன் உங்களைப் போன்ற பூமர் அங்கிள்கள் தலைவராக இருப்பதால் தான் பாகிஸ்தான் வாரியம் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும் அந்நாட்டு ரசிகர்களே ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement