கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க, சொதப்பல் இளம் வீரருக்கு ஆதரவாக பேசிய அசாருதீன் – கலாய்க்கும் ரசிகர்கள்

Azhar
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் களமிறங்கி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக உலகின் அனைத்து முன்னணி அணிகளும் தங்களுடைய அணிகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் இணைந்துள்ள இந்தியா கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான தங்களுடைய 15 பேர் அணியை வெளியிட்டுள்ளது. உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் சமீபத்திய ஆசிய கோப்பையில் பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியதால் இந்த அணியில் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சில ஏமாற்றங்களே மிஞ்சியது.

ஏனெனில் காலம் காலமாக வாய்ப்புக்காக தவமாய் தவமிருக்கும் சஞ்சு சாம்சன் மீண்டும் கழற்றி விடப்பட்டு தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்ட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அதே சமயம் சமீபத்திய ஆசிய கோப்பையில் 4வது வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் சந்தித்த தோல்வியை மறந்த தேர்வுக்குழு தீபக் சஹர், முகமத் சமி ஆகியோரை காத்திருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் சந்தித்த காயத்தால் ரவீந்திர ஜடேஜா வெளியேறியது பின்னடைவாக இருந்தாலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் மீண்டும் சேர்க்கபட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. அத்துடன் சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட நிறைய போட்டிகளில் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக செயல்பட்ட ஆவேஷ் கான் நீக்கப்பட்டுள்ளதை நிறைய ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்:
மேலும் பார்முக்கு திரும்பிய விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்த அணிக்கு வலு சேர்க்கின்றனர். இருப்பினும் சஞ்சு சாம்சனை ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட சேர்க்காத தேர்வுக்குழு சம்பந்தமே இல்லாமல் சமீபத்திய ஆசிய கோப்பையில் இடம்பெறாத ஷ்ரேயஸ் ஐயரை ஸ்டேண்ட் பை லிஸ்டில் சேர்த்துள்ளது நிறைய ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் 2017இல் அறிமுகமாகி அதிரடியாக விளையாடும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தன்னை அறிமுகப்படுத்திய அவர் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களைக் கொண்ட இந்தியாவில் பிறந்து வளர்ந்த சில பேட்ஸ்மென்கள் தடுமாறும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அதிகப்படியாக அவுட்டாக துவங்கினார். ஆனால் சுழல் பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடிக்கும் இவர் உயரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறுவது அப்பட்டமாக தெரிந்தது. அதனால் நல்ல இளம் வீரராக இருக்கும் நீங்கள் இந்த பிரச்சனையை சரி செய்யாவிடில் சுரேஷ் ரெய்னா போல் அணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என்று வாசிம் ஜாபர், ஸ்காட் ஸ்டைரீஸ் போன்ற முன்னாள் வீரர்கள் எச்சரித்தனர்.

அசாருதீன் சப்போர்ட்:
ஆனாலும் அதற்காக மெனக்கெடாத அவருடைய அந்த பலவீனத்தை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பணியாற்றும்போது தெரிந்து வைத்திருந்த பிரண்டன் மெக்கல்லம் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பால்கனியில் அமர்ந்து கொண்டே ஒற்றை செய்கையில் அவுட் செய்தது உலக அளவில் வைரலானது. அதனால் ஷ்ரேயஸ் ஐயர் என்றால் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறுவார் என்று தெரிந்து கொண்ட உலகின் அனைத்து அணிகளும் சமீப காலங்களில் அவர் களமிறங்கும் போதெல்லாம் அந்த ஆயுதத்தை கச்சிதமாகப் பயன்படுத்தி சோளியை முடித்து விடுகிறார்கள்.

அதனாலேயே ஆசிய கோப்பையில் கழற்றி விடப்பட்ட அவரை தற்போது மீண்டும் சம்பந்தமின்றி எதற்காக ஸ்டேண்ட் பை லிஸ்டில் சேர்த்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏனெனில் இங்கேயே திணறும் இவர் வேகம், பவுன்ஸ் போன்ற ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு இயற்கையாகவே கை கொடுக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கண்டிப்பாக திண்டாடுவார் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

அந்த நிலைமையில் தேர்வுக்குழு அறிவித்த உலக கோப்பை அணியை பார்த்த முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஷமி ஆகியோர் முதன்மையான அணியில் இடம் பிடித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதில் ஹர்ஷல் படேலுக்கு பதில் ஷமியை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ளும் ரசிகர்கள் தீபக் ஹூடாவுக்கு பதில் ஷ்ரேயஸ் ஐயரை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று கூறுவதை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளாமல் கொஞ்சமாவது மனசாட்சியுடன் பேசுங்கள் என்று கலாய்கின்றனர்.

Advertisement