என் ஃப்ரண்ட போல யாரு மச்சான், திடீரென பாசத்தை பொழியும் ஜடேஜா – மஞ்சரேக்கர், ரசிகர்கள் வியப்பு

sanjay 1
- Advertisement -

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திர சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவருக்கு பதில் நான் இருக்கிறேன் என்ற வகையில் மற்றொரு சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. முன்னதாக காயத்தால் வெளியேறிய ரவீந்திர ஜடேஜா ஆரம்ப காலங்களில் அதிகப்படியான வாய்ப்பை பெற்று சுமாராக செயல்பட்டதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

இருப்பினும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்த அப்போதைய கேப்டன் தோனி தொடர்ச்சியாக கொடுத்த வாய்ப்புகளின் பயனாக 2018க்குப்பின் சிறப்பாக செயல்படத் துவங்கிய அவர் 2019 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனியுடன் இணைந்து அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடிய இன்னிங்ஸ் அவரை உலகத்தரம் வாய்ந்த வீரராகக் மாற்றியது எனலாம். ஏனெனில் அப்போது முதல் பேட்டிங்கில் பிரம்மாண்ட எழுச்சி கண்ட அவர் 3 வகையான இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி உலக அளவில் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

மஞ்சரேக்கரின் பங்கு:
குறிப்பாக ஐபிஎல் தொடரில் தோனி பார்மை இழந்த 2020க்குப்பின் அவரது இடத்தில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு சென்னையின் லேட்டஸ்ட் பினிஷெராக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த காரணத்தாலேயே இந்த வருடம் அவரிடம் நம்பி கேப்டன்ஷிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அப்படி பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள அவருடைய வளர்ச்சிக்கு முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றே கூறலாம். ஏனெனில் ஆரம்ப காலங்களில் சுமாராக செயல்பட்டதால் “எப்போதாவது மட்டும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்” என்று 2019 உலகக் கோப்பையின் போது அவர் ட்விட்டரில் ஜடேஜாவை விமர்சித்திருந்தார்.

அதனால் கொதித்தெழுந்த ஜடேஜா ட்விட்டரில் நேரடியாக காரமான பதிலை கொடுத்தது மட்டுமல்லாமல் நியூசிலாந்துக்கு எதிராக தனது கேரியரை மாற்றிய இன்னிங்ஸ் விளையாடி பேட்டால் பதிலடி கொடுத்தார். அப்போது முதல் எலியும் பூனையுமாக மாறியது போல் ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து ஜடேஜாவை மஞ்ரேக்கர் விமர்சிப்பதும் அதற்கு அடுத்த போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டு ஜடேஜா பதிலடி கொடுப்பதும் கடந்த 2 – 3 வருடங்களாக தொடர் கதையாகி வருகிறது.

- Advertisement -

திடீர் பாசமழை:
அதனால் ரவீந்திர ஜடேஜா – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் என்றாலே பகையாளிகளாக ரசிகர்கள் பார்க்கின்றனர். இந்நிலையில் விரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் போன்ற ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்று வரும் லெஜெண்ட்ஸ் தொடரில் தொகுப்பாளராகவும் வர்ணனையாளராகவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பணியாற்றி வருகிறார். மறுபுறம் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வரும் ரவீந்திர ஜடேஜா நேற்று நடைபெற்ற ஒரு லெஜன்ட்ஸ் போட்டியை வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்.

அப்போது அப்போட்டியை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தொகுத்து வழங்கியதை பார்த்து உற்சாகமடைந்த ரவீந்திர ஜடேஜா “என்னுடைய அன்பான நண்பரை திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்ற வாசகத்துடன் புகைப்படம் எடுத்து தனது ட்வீட்டரில் பதிவிட்டார். பொதுவாகவே விமர்சிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்திய ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியை பெற்று கொடுத்த பின் “என் மீது கோபமில்லையே, என்னுடன் பேசுவீர்களா” என்று பேட்டி எடுக்கும் போது ஜடேஜாவிடம் தயவாக கேட்டார்.

- Advertisement -

அதனால் நெகிழ்ந்த ஜடேஜா “எந்த கோபமுமில்லை, கண்டிப்பாக பேசுவேன்” என்று பதிலளித்து பேட்டி கொடுத்தார். ஒருவேளை அதன் காரணத்தாலேயே அவர் மீதான கோபங்களை விட்டு அவரை நண்பராக ஏற்றுக்கொண்டு இந்த பதிவை ஜடேஜா பதிவிட்டிருப்பார் என்று நம்பப்படுகிறது.

அதை பார்த்து ஆச்சரியமடைந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “ஹாஹா, உங்களுடைய அன்பான நண்பன் நீங்கள் விரைவில் களமிறங்கி விளையாடுவதை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்” என்று ஜடேஜாவுக்கு இன்று காலை அன்புடன் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs RSA : பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜை தேர்வு செய்ய என்ன காரணம்? – விவரம் இதோ

இதை பார்க்கும் ரசிகர்கள் ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த ஜடேஜா – மஞ்சரேக்கரா இது என வியப்பதுடன் இந்த அன்பு தொடரட்டும் என்று வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

Advertisement