இதுக்கு கூட சரிப்பட்டு வரலைனா எப்படி, கேஎஸ் பரத்தை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன

- Advertisement -

உலகின் டாப் 2 அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்தியாவை 3வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் தகுதி பெற்றது. அதனால் 2 – 1* (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்றாலும் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கியுள்ள கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாடி வருகிறது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு இம்முறை ஃபிளாட்டாக இருந்த பிட்ச்சில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டிராவிஸ் ஹெட் 7 பவுண்டரியுடன் 32 (43) ரன்கள் குவித்து அஷ்வின் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 3 (20) ரன்களில் ஷமியின் வேகத்தில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்த உஸ்மான் கவஜா அரை சதம் கடந்ததால் ஆஸ்திரேலியா 100 ரன்களை கடந்து நல்ல தொடக்கத்தை பெற்று விளையாடி வருகிறது.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
முன்னதாக இப்போட்டியில் ஆரம்பத்திலேயே உமேஷ் யாதவ் வீசிய 6வது ஓவரின் 5வது பந்தில் டிராவிஸ் ஹெட் எட்ஜ் கொடுத்தார். ஆனால் அழகாக அல்வா போல கைக்கு வந்து அந்த பந்தை பிடிக்க வேண்டிய விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் சொதப்பி கேட்ச்சை தவற விட்டது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. ஏனெனில் வெறும் 135.2 கி.மீ வேகத்தில் உமேஷ் யாதவ் வீசிய அந்த பந்து லேசாக ஸ்விங் ஆகி டிராவிஸ் ஹெட் பேட்டில் பட்டு வரும் போது மேலும் வேகம் குறைந்து அழகாக கைக்கு வந்தது. ஆனாலும் எட்ஜ் கொடுக்கும் போது ஒரு நொடி இடத்துக்கு புறம் சென்று வலது புறம் வந்த காரணத்தால் அந்த அழகான கேட்ச்சை கேஎஸ் பரத் தவற விட்டதைப் பயன்படுத்திய டிராவிஸ் ஹெட் 7 ரன்களில் இருந்து இறுதியில் 32 ரன்கள் எடுத்தார்.

அப்படி எளிதான கேட்ச் தவற விட்டதால் 25 ரன்கள் டிராவிஸ் ஹெட் கூடுதலாக அடித்துள்ளார். கடந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஒரு நோ-பால் வீசியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது போல இந்த கேட்ச் இந்தியாவின் வெற்றியை பறித்து விடக்கூடாது என்பதே இந்திய ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. அதை விட ரிஷப் பண்ட் காயமடைந்து வெளியேறிய காரணத்தால் இத்தொடரில் வாய்ப்பு பெற்ற கேஎஸ் பரத் முதல் 3 போட்டிகளில் பேட்டிங்கில் நல்ல ரன்களை குவித்து வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்படவில்லை.

- Advertisement -

மாறாக 90களில் விக்கெட் கீப்பர்கள் செய்த பந்து பிடித்து போடும் வேலையை மட்டுமே முதல் 3 போட்டிகளில் செய்தார். எனவே ரிஷப் பண்ட் போல அதிரடியாக விளையாட விட்டாலும் பரவாயில்லை குறைந்தது விக்கெட் கீப்பிங்கிலாவது ஓரளவு அசத்துகிறார் என்ற ஒரே காரணத்தால் முதல் 3 போட்டிகளில் பெரிய ரன்களை எடுக்காத போதும் கேஎஸ் பரத்தை ரசிகர்கள் பெரும்பாலும் விமர்சிக்கவில்லை. ஆனால் அதிலும் எளிதான கேட்ச் விட்டு சொதப்பினால் என்ன செய்வது? என்று தற்போது ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இத்தனைக்கும் அதிகமான உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள கேஎஸ் பரத் தமது வயதை (29) போலவே ரிஷப் பண்ட்டை விட அதிக அனுபவத்தை பெற்றிருந்தும் இவ்வாறு சொதப்புவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது.

இதையும் படிங்க: வீடியோ : பார்ட்னர்ஷிப் உடைத்த அஷ்வின், வெல்வோம் என எச்சரித்த நம்பர் ஒன் ஆஸி பேட்ஸ்மேன் ஸ்டம்ப்களை தெறிக்க விட்ட ஷமி

அதனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராகவும் அதிரடி பேட்ஸ்மேனாகவும் செயல்படக்கூடிய ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement