இது லோக்கல் மேட்ச்சா ! ஆயிரம் இருந்தாலும் பண்ட் பண்ணது தவறு – விமர்சனத்துக்கு உள்ளான டெல்லி

Pant
- Advertisement -

ஐபிஎல் 2022 ஏப்ரல் 22-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் தேவதூத் படிக்கல் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில் கம்பெனி கொடுக்கும் வகையில் படிக்கல் பேட்டிங் செய்கையில் மறுபுறம் டெல்லிக்கு கருணை காட்டாத ஜோஸ் பட்லர் ரன் மழை பொழிந்தார்.

முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தானை ஆரம்பத்திலேயே முன்னிலைப்படுத்திய இந்த ஜோடியில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 54 (35) ரன்கள் எடுத்து படிக்கல் ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து டெல்லியை பிரித்து மேய்ந்து பட்டையை கிளப்பிய பட்லர் 9 பவுண்டரி 1 சிக்சர் உட்பட சதமடித்து 116 (65) ரன்கள் விளாசினார். இது இந்த வருடம் அவர் அடிக்கும் 3-வது சதமாகும்.

- Advertisement -

ராஜஸ்தான் 222 ரன்கள்:
அவர் அவுட்டானாலும் அவருடன் விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 5 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்டு 46* (19) ரன்கள் விளாசி சூப்பரான பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 222/2 ரன்களை எடுத்த ராஜஸ்தான் இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அசத்தியது. அதைத்தொடர்ந்து 223 என்ற மெகா இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 28 (14) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த சர்பராஸ் கான் 1 ரன்னில் நடையை கட்டினார்.

அதேசமயம் மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா 5 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 37 (27) ரன்களுடன் வெளியேறியபோது அடுத்த சில ஓவர்களிலேயே அதிரடியாக விளையாடி கொண்டிருந்த கேப்டன் ரிஷப் பண்ட் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 (24) ரன்கள் எடுத்து அவுட்டாகி ஏமாற்றினார். அந்த நிலையில் அடுத்து வந்த அக்சர் பட்டேல் 1 (4), ஷார்துல் தாகூர் 10 (7) ரன்களில் அடுத்தடுத்து அவுட்டானது பின்னடைவை ஏற்படுத்தியது. அப்போது வெற்றிக்கு போராடிய லலித் யாதவும் 32 (24) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

டெல்லி போராடி தோல்வி:
இப்படி முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் கடைசி நேரத்தில் ரோவ்மன் போவெல் அதிரடியாக 5 சிக்சர் உட்பட 36 (15) ரன்கள் எடுத்து அவுட்டானதால் 20 ஓவர்களில் 207/8 ரன்களை மட்டுமே எடுத்த டெல்லி போராடி தோல்வியடைந்தது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக இந்த போட்டியில் வெற்றியை கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்ட போது அதிரடி வீரர் ரோவ்மன் போவல் அதிரடியாக முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்த 3 சிக்ஸர்களை பறக்க விட்டார். அதில் 3-வது பந்தை புல் டாசாக வீசப்பட்ட நிலையில் அதை போவல் சிக்சர் அடித்த போதிலும் அந்த பந்து இடுப்புக்கு மேலே வந்தது. அந்த நிலையில் அந்த பந்தை அம்பயர் நோ பால் என அறிவிக்காதது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

- Advertisement -

கோபமான ரிஷப் பண்ட்:
அதனால் ஆத்திரமடைந்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கோபமடைந்து களத்தில் இருந்த குல்தீப் யாதவ் மற்றும் போவல் ஆகிய இருவரையும் பெவிலியனுக்கு அழைத்தார். அதேசமயம் டெல்லியின் பயிற்சியாளர் பர்வின் ஆம்ரே மைதானத்துக்குள் நுழைந்து அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அந்த முடிவில் கடைசி வரை அம்பயர் பின்வாங்காமல் இருந்ததுடன் டெல்லி வீரர்களை அனுப்ப மறுத்ததால் ஒருவழியாக சர்ச்சைக்கு மத்தியில் போட்டி நடைபெற்று முடிந்தது.

அந்த நேரத்தில் நோ பால் என தெளிவாக தெரிந்தும் அதை கொடுக்காத அம்பயர் 3-வது அம்பயரை அணுகாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டதால் ரசிகர்களும் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மொத்தத்தில் விதிமுறைப்படி அது நோபால் என்றாலும் பொதுவாக அம்பயர்களும் மனிதர்கள் என்பதால் களத்தில் அவர்கள் வழங்கும் தீர்ப்பே இறுதியானதாகும். அப்படிப்பட்ட நிலையில் அவரின் சர்ச்சையான தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாத டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் களத்தில் எப்படிஅவ்வாறு நடந்து கொள்ளலாம் என்று பல முன்னாள் வீரர்கள் விமர்சிக்கின்றனர்.

அதுவும் வீரர்களை பெவிலியனுக்கு திரும்ப அழைக்கும் அளவுக்கு இது என்ன லோக்கல் மேட்ச்சா என்றும் அவரை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விளாசுகின்றனர். அந்த சமயத்தில் ரிஷப் பண்டை ஆஸ்திரேலிய ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ஷேன் வாட்சன் சமாதானம் செய்து கொண்டிருக்க மறுபுறம் மைதானத்திற்குள் நுழைந்து அம்பயரின் வாக்குவாதம் செய்த டெல்லி பயிற்சியாளர் பர்வின் ஆம்ரேவையும் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement