ஐபிஎல் 2024 தொடர் கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. அந்த தொடரில் ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டியில் தோற்கடித்த கொல்கத்தா 3வது கோப்பையை வென்று சாதனை படைத்தது. முன்னதாக இந்த தொடரில் முதல் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கிய பெங்களூரு முதல் 7 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது.
அந்த சமயங்களில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்கள் குவித்தாலும் அதை கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். அதனால் பெங்களூரு கிரிக்கெட் அணியின் தோல்விகளுக்கு விராட் கோலி தான் முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிரான ஒரு போட்டியில் அரை சதமடித்த விராட் கோலி 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானார்.
எரிமலை எப்படி பொறுக்கும்:
அப்போது இது போன்ற ஆட்டத்தை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்று சுனில் கவாஸ்கர், சைமன் டௌல் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அதனால் சூடான விராட் கோலி அதற்கடுத்த போட்டிகளில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி மொத்தம் 741 ரன்கள் குவித்து பெங்களூரு கடைசி 6 போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு உதவினார்.
இருப்பினும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியை சந்தித்த பெங்களூரு லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் விராட் கோலி 2வது முறையாக ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்தார். அத்துடன் தம்மை விமர்சித்த முன்னாள் வீரர்களுக்கும் பதிலடி கொடுத்த அவர் தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்தார். இந்நிலையில் விராட் கோலியை போன்றவரை விமர்சித்து எரிமலையாக செயல்பட வைத்த சைமன் டௌல், கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களுக்கு தினேஷ் கார்த்திக் நன்றி தெரிவித்துள்ளார்.
இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஐபிஎல் தொடர் எப்படி இருந்தது என்பதை பற்றி நான் புத்தகம் எழுதுவேன். இந்த வருடம் விராட் கோலி சுமாராகவே தொடங்கினார். ஆனால் சைமன் போன்ற சிலர் அவரை தூண்டினார்கள். உண்மையாக அந்த பக்கத்தை நீங்கள் பார்க்க விரும்ப மாட்டீர்கள். அதில் அவர் வெற்றி பெறுவார். விராட் கோலி எப்போதும் தன்னை விமர்சிப்பவர்களை தவறு என்று நிரூபிக்க விரும்புபவர்”
இதையும் படிங்க: இப்போ சந்தோசமா.. ஐபிஎல் தொடரால் ஆஸி அணிக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை.. மார்ஷ் பரிதாப பேட்டி
“அதை வெளியே சொல்லாவிட்டாலும் உண்மையில் அது அவருடைய ஆர்வத்தை தூண்டுகிறது. அதனால் அவர் உருகிய எரிமலை குழம்பு போல் இருக்கிறார். அந்த சமயங்களில் உக்கிரமாக இருக்கக்கூடிய அவரிடம் நீங்கள் அருகில் இருக்க விரும்பமாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் நிச்சயமாக எரிக்கப்படுவீர்கள். ஏனென்றால் அவர் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபிக்கிறார்” என்று கூறினார்.