ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4வது அணியாக தகுதி பெற்றது. மே 18ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு கேப்டன் டு பிளேஸிஸ் 54, விராட் கோலி 47, ரஜத் படிடார் 41, க்ரீன் 38* ரன்கள் உதவியுடன் 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
ஆனால் அதைத் துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 0, சிவம் துபே 7, மிட்சேல் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ரச்சின் ரவீந்தரா 61, ஜடேஜா 42*, ரஹானே 33, தோனி 25 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 191/7 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை தோற்றது. அதனால் கோப்பையை தக்க வைக்க முடியாமல் சென்னை அணி பரிதாபமாக வெளியேறியது.
தோனியின் சிக்ஸர்:
மறுபுறம் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். குறிப்பாக கடைசி ஓவரில் ரன்ரேட் அடிப்படையில் சென்னை பிளே ஆஃப் செல்வதற்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் தோனி 110 மீட்டர் மெகா சிக்சரை அடித்தார். அதனால் சிஎஸ்கே வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் மனம் தளராத அவர் அடுத்த பந்திலேயே தோனியை அவுட்டாக்கி கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது ஜடேஜாவையும் ஃபினிஷிங் செய்ய விடாமல் பெங்களூருவை வெற்றி பெற வைத்தார். முன்னதாக கடைசி ஓவரில் தோனி அடித்த 110 மீட்டர் மெகா சிக்ஸர் பந்து சின்னசாமி மைதானத்தை விட்டு வெளியே சென்று விழுந்தது. அதனால் உடனடியாக புதிய பந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தோனி அடித்த அந்த பிரம்மாண்ட சிக்சரால் அடுத்த பந்தில் புதிய பந்து கொண்டு வரப்பட்டதே ஆர்சிபி வெற்றிக்கு வித்திட்டதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதாவது ஈரப்பதமான சூழ்நிலையில் புதிய பந்து கிடைத்ததால் யாஷ் தயாள் மேற்கொண்டு ரன்களை கொடுக்காமல் சிறப்பாக பந்து வீசி வெற்றி பெற உதவியதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றி அவர் ஆர்சிபி இணையத்தில் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை
“இன்று நடைபெற்ற சிறப்பான விஷயம் என்னவெனில் தோனி அடித்த சிக்சர் மைதானத்திற்கு வெளியே சென்றதாகும். அதன் காரணமாக எங்களுக்கு புதிய பந்து கிடைத்தது. அது இன்னும் சிறப்பாக பந்து வீசுவதற்கு கை கொடுத்தது” என்று கூறினார். மொத்தத்தில் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு தற்போது பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுள்ளதால் கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.