இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2019 வரை 90 டெஸ்ட் போட்டிகள், 350 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்திய அணியின் மகத்தான கேப்டன் என்று போற்றப்படும் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் இந்திய அணி வென்றுள்ளது.
கிரிக்கெட் உலகம் கண்ட மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் தோனி கேப்டனாகவும் பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியவர். சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 17266 ரன்கள், 16 சதங்கள், 359 சிக்ஸர்கள், 634 கேட்ச்கள், 195 ஸ்டம்பிங்குகளையும் செய்த அவர் கிரிக்கெட் உலகில் இந்தியாவின் ஒரு லெஜெண்ட்டாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்து வெளியேறிய தோனி, அதன் பின்னர் கிரிக்கெட் விளையாடவே மாட்டார் என்பது யாரும் யோசிக்காத ஒன்று.
அந்த வகையில் சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை இரவு 7.29 மணிக்கு அவர் சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளியிட்டார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அவர் வெளியிட்ட அந்த பதிவு அன்று இந்தியா முழுவதும் இருந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்ணீரையும் வெளிக்கொண்டு வந்தது.
இந்திய ரசிகர்கள் அனைவரும் அன்று சொல்ல முடியா சோகத்தில் ஆழ்ந்தனர். அந்த வகையில் அவர் வெளியிட்ட அந்த பதிவு ஐந்து கோடி முறை பார்க்கப்பட்ட வீடியோவாக மாறியது. அந்த வீடியோவில் : உங்கள் அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி. இன்று இரவு 7.29 மணி முதல் நான் ஓய்வு பெற்று விட்டதாக கருதுங்கள் என்று அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க : IND vs ZIM : ஜிம்பாப்வே தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட இவரே சரியானவர் – முன்னாள் வீரர் ஆதரவு
கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஜாம்பவானாக திகழ்ந்த, ரசிகர்களின் மனதை கவர்ந்த கேப்டன் தல தோனி இந்திய ரசிகர்களை மட்டும் இன்றி உலக ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்திய தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.