மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்னும் சில தினங்களில் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கும் இத்தொடர் 54 நாட்கள் நடைபெறும். இத்தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்தொடருக்கான முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் மோதிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல் தொடர் நெருங்கி வருவதால் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதேபோன்று இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே துபாய் சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்த பல்வேறு கருத்துகளை முன்னாள் வீரர்கள் பலரும், கிரிக்கெட் விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரும் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளரான டேவிட் ஹஸ்ஸி இந்த ஐபிஎல் தொடர் குறித்து தனது கருத்தினை அளித்துள்ளார். மேலும் அதில் அவர் இந்த ஐபிஎல் தொடரில் இரட்டை சதம் அடிக்கும் வீரர் குறித்தும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நிச்சயம் ஐபிஎல் தொடரில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு எங்கள் அணியின் அதிரடி வீரரான ஆண்ட்ரே ரசலுக்கு உண்டு.
ரசல் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய இறங்கி 60 பந்துகளை சந்தித்தால் நிச்சயம் அவருக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அவரது அதிரடியை நாம் பலமுறை கண்டிருப்போம் நிச்சயம் அவர் இரட்டை சதம் அடிக்க கூடிய வீரர் தான். இம்முறை அவருக்கு கொல்கத்தா அணியில் முன்கூட்டியே இறங்க அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும் அதன்மூலம் அவர் இத்தொடரில் தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் அவர் கூறியிருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரசல் 510 குவித்தது மட்டுமின்றி ஸ்ட்ரைக் ரேட் 200க்கு மேல் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பல போட்டிகளை தனியொரு ஆளாக நின்று வெற்றி தேடிக்கொடுத்த ரசலின் அதிரடியை பார்த்த நமக்கு அவர் கூறிய இருந்த கருத்தில் எந்த தப்பும் இல்லை என்றே தோன்றுகிறது.