
இந்தியாவில் அடுத்த ஆண்டு துவங்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ள வேளையில் இன்னும் இரு வாரத்தில் ஐபிஎல் தொடரின் வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ள வேளையில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
இதன் காரணமாக இந்த மெகா ஏலமானது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ஏற்கனவே அனைத்து அணிகளும் தங்களது அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளதால் எந்தெந்த வீரர்கள்? எந்தெந்த அணிக்காக இடம் மாறுவார்கள்? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதோடு புதிய வீரர்கள் சிலருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பையைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேனான ஆயுஷ் மாத்ரே தனது அபாரமான பேட்டிங் திறமையால் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் மனம் கவர்ந்த வீரராக மாறியுள்ளார்.
இந்த ஆண்டு இராணி கோப்பை தொடரில் தனது கிரிக்கெட் கரியரை துவங்கிய அவர் முதல்தர கிரிக்கெட்டில் முதல் ஐந்து போட்டியில் 321 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதை தவிர்த்து ரஞ்சிக்கோப்பை மகாராஷ்டிரா அணியிலும் 176 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.
இந்நிலையில் மெகா ஏலத்திற்கு முன்பாக ஆயுஷ் மாத்ரேவை சென்னை அணி சார்பில் பயிற்சி போட்டிகளில் விளையாடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக தோனி தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தோனி அவரை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும் என்றும் அவரது திறமையை பரிசோதிக்க வேண்டும் என்பதாலேயே காசி விஸ்வநாதன் மூலம் மின்னஞ்சல் கொடுத்து ஆயுஷ் மாத்ரேவை பயிற்சி போட்டிகளில் பங்கேற்க கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : கில், விராட் கோலி கிடையாது.. இவர் தான் இந்தியாவின் புதிய கிங்.. பட்டம் சூட்டி வரவேற்ற ஆஸி பத்திரிகை
ஒருவேளை சென்னையில் நடைபெறும் பயிற்சியிலும் ஆயுஷ் மாத்ரே கலக்கும் பட்சத்தில் சி.எஸ்.கே அணி அவரை ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.