அவமானம்! அடுத்தடுத்த தோல்விகளால் பெரிய அவமானத்தை சந்தித்த சென்னை – என்ன காரணம்?

PBKS vs CSK
- Advertisement -

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 3-ஆம் தேதி நடைபெற்ற 11-வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து வந்த ராஜபக்சாவை 9 ரன்கள் எடுத்திருந்தபோது எம்எஸ் தோனி அபாரமாக ரன் அவுட் செய்தார்.

CSKvsPBKS

- Advertisement -

இதனால் 14/2 என மோசமான தொடக்கத்தை பெற்ற பஞ்சாப் அணிக்கு அடுத்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானுடன் இணைந்து அதிரடியாக மீட்டெடுத்தார். போதாகுறைக்கு அதுவரை சிறப்பாக பந்து வீசிய சென்னை பவுலர்கள் அவரைக் கண்டதும் மோசமாக பந்து வீசினார்கள்.

மிரட்டிய லிவிங்ஸ்டன்:
அதை பயன்படுத்திய லிவிங்ஸ்டன் சரவெடியாக வெடித்து 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பஞ்சாப் அணியை தூக்கி நிறுத்தினார். அப்போது 24 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 33 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் ஆட்டமிழக்க அவருடன் பட்டையைக்கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்திய லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் உட்பட அரைசதம் அடித்து 60 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

Livingstone

இதனால் 200 ரன்களை நோக்கி ராக்கெட் வேகத்தில் பறந்த பஞ்சாப்பை அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து கச்சிதமாக மடக்கிய சென்னை பவுலர்கள் அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் அவுட் செய்து கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசினார்கள். இறுதியில் ஜிதேஷ் சர்மா 17 பந்துகளில் 3 சிக்சர்கள் உட்பட 27 ரன்கள் குவிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த பஞ்சாப் 180 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் அசத்திய பிரெடோரியஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

சென்னை பேட்டிங் சொதப்பல்:
இதை தொடர்ந்து 181 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது என்று கூறலாம். ஏனெனில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இளம் தொடக்க வீரர் ருத்ராஜ் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 13 (10) ரன்களில் அவுட்டாகி அவருடனேயே பெவிலியன் சென்றார். அப்போது தான் சென்னைக்கு அதைவிட மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் மொயின் அலி டக் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே கேப்டன் ரவீந்திர ஜடேஜா டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி அளித்தார்.

CSK vs PBKS

இதனால் 36/5 என படு மோசமான தொடக்கத்தை பெற்ற சென்னையின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் இளம் வீரர் சிவம் துபே ஆகியோர் சென்னையை சரிவில் இருந்து மீட்க போராடினர். இதில் 30 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உட்பட அரை சதம் அடித்த சிவம் துபே 57 ரன்கள் எடுத்த போது முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இதனால் சென்னையின் தோல்வி உறுதியான நிலையில் அடுத்து வந்த டுவைன் பிராவோ முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி மேலும் அதிர்ச்சி கொடுத்தார். கடைசி நேரத்தில் பிரெடோரியஸ் 8, கிறிஸ் ஜோர்டான் 5 என அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்ட மறுபுறம் 28 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து போராடி கொண்டிருந்த எம்எஸ் தோனி ஆட்டமிழந்ததால் கடைசிவரை 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் தாரைவார்த்த சென்னை 54 ரன்கள் வித்யாசத்தில் படுமோசமான தோல்வி அடைந்தது.

CSK vs PBKS 2

ஹாட்ரிக் தோல்வி:
எதிர்ப்புறம் முதலில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய பஞ்சாப் அடுத்ததாக பந்துவீச்சில் சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்து அபாரமாக செயல்பட்டதால் இந்த வருடத்தின் 2-வது வெற்றியை ருசித்தது. அந்த அணி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ராகுல் சகார் 3 விக்கெட்டுகளையும் வைபவ் அரோரோ மற்றும் லிவின்ஸ்டன் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியில் 60 ரன்களும் 2 விக்கெட்டுகளும் எடுத்து ஆல்-ரவுண்டராக முக்கிய பங்காற்றிய லிவிங்ஸ்டன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

முன்னதாக இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை கொல்கத்தாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதன்பின் லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்தது. தற்போது பஞ்சாப் அணிக்கு எதிரான 3-வது போட்டியிலும் தோல்வியடைந்த சென்னை இந்த வருடத்தின் முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பதிவு செய்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய தல தோனி – விவரம் இதோ

இப்படி ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் சந்திப்பது இதுவே வரலாற்றில் முதல் முறையாகும். கடந்த 2008 முதல் அடுத்தடுத்த வெற்றிகளை குவித்து 4 கோப்பைகளையும் வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள சென்னை அணி இப்படி வரலாற்றிலேயே முதல் முறையாக படுதோல்வியை சந்தித்து மாபெரும் அவமானத்தை தழுவியது அந்த அணி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

Advertisement