ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.
அதன்பிறகு சென்னை அணி முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது துவக்க வீரரான டூப்ளிஸிஸ் சிறப்பாக ஆடி 54 ரன்களை அடித்தார். கடைசி கட்டத்தில் தோனி மற்றும் ராயுடு அதிரடியாக ஆடி அணியை ஒரு நல்ல இலக்கினை எட்ட உதவினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது.
அதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
இந்த போட்டி முடிந்ததும் சென்னை அணியை சேர்ந்த ரசிகர்களின் அமைப்பான விசில் போடு ஆர்மி சேப்பாக்கம் மைதானம் முழுவதும் இருந்த 10 கிலோ குப்பைகளை அகற்றியது. அகற்றிய குப்பையினை மைதான உதவியாளர்களோடு சேர்ந்து வெளியேற்றவும் உதவினார்கள். இதனை கண்ட சுரேஷ் ரெய்னா தனது மொபைலில் புகைப்படம் எடுத்தார்.
பிறகு ரெய்னா அதனை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உங்களை பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது என்று பதிவிட்டு அவர்களின் புகைப்படத்தினையும் பதிவிட்டு இந்தியா முழுவதும் இதுபோன்று சுத்தமாக வைத்துக்கொள்ள அனைவரும் உதவுங்கள் என்று தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
சென்னை ரசிகர்களின் இந்த செயல் பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகளை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.