இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்திய டெஸ்ட் அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். இதுவரை 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர் சுமார் 10000 ரன்களை அடித்துள்ளார்.
அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வரும் அவர் சமீபத்திய தொடர்களில் பெரிதாக அசத்தவில்லை. அதிலும் கடந்த நியூசிலாந்து தொடரில் அவருடைய மோசமான பேட்டிங் சொந்த மண்ணில் இந்தியாவின் வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்விக்கு வித்திட்டது. அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த விராட் கோலி தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஓய்வாகிறாரா கோலி:
ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் தன்னுடைய விக்கெட்டை இழந்தது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது. அவருடைய மோசமான பேட்டிங் 3 – 1 (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்தது. மறுபுறம் அவரைப்போலவே கேப்டன் ரோஹித் சர்மாவும் தடுமாற்றமாக விளையாடி வந்தார்.
அதனால் அவர்களை ஓய்வு பெறுமாறு ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். அந்த நிலையில் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மாவை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாக ரோகித் சர்மா மரியாதையுடன் ஓய்வு பெற்றார். அவரைப்போலவே விராட் கோலி ஓய்வு முடிவை தெரிவித்ததாகவும் அதை பிசிசிஐ மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கலாய்த்த கவுன்டி:
இந்நிலையில் இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப் நிர்வாகம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை போட்டு விராட் கோலியை கலாய்த்துள்ளது. அதாவது இங்கிலாந்தில் நடைபெற்ற சமீபத்திய கவுன்டி போட்டிகளில் நிறைய பேட்ஸ்மேன்கள் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளால் க்ளீன் போல்ட் மற்றும் அவுட் சைட் எட்ஜ் முறையில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த விக்கெட்டுகளை ஒன்றாக சேர்த்து கவுன்டி நிர்வாகம் வீடியோவாக பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 192/0 டூ 190 ஆல் அவுட்.. 10 ரிட்டையர்ட் அவுட்.. நினைத்து பார்க்க முடியாத வினோதத்தை நிகழ்த்தி வென்ற அமீரகம்
அந்த வீடியோவை “உங்களைச் சொல்லி குற்றமில்லை விராட்” என்ற தலைப்புடன் கவுன்டி நிர்வாகம் பதிவிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே அவுட் சைட் ஸ்டம்ப் பந்துகளில் திணறும் விராட் கோலி இங்கிலாந்தில் நிச்சயம் சொதப்பி விடுவோம் என்ற பயந்துக் கொண்டு ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக கவுன்டி நிர்வாகம் கலாய்த்துள்ளது. அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் விராட் கோலி 2018 தொடரில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெளுத்து வாங்கியதை மறந்து விட்டீர்களா? என்று பதிலடி கொடுக்கின்றனர்.