நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான மெக்கல்லம் 2016ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் போன்ற வெளிநாட்டு டி20 தொடரில் மட்டும் அவர் பங்கேற்று விளையாடி வந்தார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும் மற்றும் குஜராத் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். இந்நிலையில் தற்போது கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார் மெக்கல்லம்.
இந்நிலையில் மெக்கல்லம் கடைசியாக நடைபெற்ற குளோபல் டி20 லீக் போட்டிக்கு பின்னர் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது குறித்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது : இந்த ஓய்வு முடிவு எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இருந்தாலும் இதனை நான் எடுத்துதான் ஆகவேண்டும்.
எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். அதனை விட்டுப் போவது என் மனதை மிகவும் பாதிக்கிறது. இனிமேல் நான் கிரிக்கெட் பேட்டை எடுக்க முடியாது என்ற கஷ்டமும் எனக்குள் இருக்கிறது. நான் விளையாடிய தருணங்களில் பல சம்பவங்களை பசுமையாக வைத்துள்ளேன், இனிவரும் காலத்தில் எப்படி நடக்கப்போகிறது என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன் என்றும் மெக்கல்லம் தெரிவித்தார்.