ரிஷப் பண்ட்டை மாற்ற அவரால் தான் முடியும், ஐபிஎல் தொடரில் பாண்டிங் அந்த முடிவை எடுக்கணும் – ப்ராட் ஹாக் கோரிக்கை

Ricky Ponting Rishabh Pant Brad Hogg
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறுகிறது. அதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் வீரர்கள் ஏலத்தில் தேவையான வீரர்களுக்கு வாங்கிக்கொண்டு புதிய சீசனில் கோப்பையை வெல்வதற்கு களமிறங்கும் அணிகளுக்கு மத்தியில் முதல் கோப்பையை முத்தமிட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தயாராகி வருகிறது. ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய அந்த அணி பெயரையும் உடையையும் மாற்றி சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 2020 சீசனில் முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற அந்த அணி கோப்பையை நழுவ விட்டது.

ஆனால் அடுத்த சீசனில் காயத்தால் வெளியேறிய அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட் அவர் குணமடைந்து வந்த பின்பும் தொடர்ந்து கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் இந்த வருடம் ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட்ட டெல்லி நிர்வாகம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியின் அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் வருங்கால கேப்டனாகவும் தன்னை அடையாளப்படுத்தி வரும் ரிஷப் பண்ட்டை நம்பி நிரந்தர கேப்டனாக அறிவித்துள்ளது. ஆனால் அவரது தலைமையில் 2021 சீசனில் ப்ளே ஆப் சுற்று வரை சென்ற டெல்லி 2022 சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

- Advertisement -

பாண்டிங் கையில்:
கேப்டனாக முன்னின்று அதிரடி காட்ட வேண்டிய ரிஷப் பண்ட் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதே அதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. அப்படி இந்த சீசன் மட்டுமல்லாமல் இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எப்போதும் சுமாராகவே செயல்பட்டு வரும் அவர் தற்சமயத்தில் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் 2023 சீசனில் ரிஷப் பண்ட் வெற்றிகரமாக செயல்படுவதற்கு அவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கும் முடிவை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எடுக்க வேண்டுமென முன்னாள் வீரர் ப்ராட் ஹாக் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முன்னேறுவதை மட்டுமே அவரிடம் நான் பார்க்க விரும்பும் விஷயங்களில் ஒன்றாகும். குறிப்பாக உள் வட்டத்திற்கு வெளியே பீல்டர்கள் நிற்கும் போது டெஸ்ட் கிரிக்கெட் போல அவரால் வெற்றிகரமாக செயல்பட முடிவதில்லை. இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவருடன் ரிக்கி பாண்டிங் உள்ளார். எனவே அடுத்த சீசனில் ரிஷப் பண்ட் பெரிய ரன்களை குவிப்பார் என்று நினைக்கிறேன். அவரிடம் அட்டாக் செய்து வித்தியாசமாக விளையாடும் திறமை உள்ளது”

- Advertisement -

“அதை முழுமையாக பயன்படுத்த ரிக்கி பாண்டிங் அவரை கீழ் பேட்டிங் வரிசையில் அனுப்பாமல் இம்முறை தொடக்க வீரராக அனுப்புவார் என்று நம்புகிறேன். குறிப்பாக பவர் பிளே ஓவரில் உள்வட்டத்திற்கு வெளியே 2 வீரர்கள் மட்டுமே இருப்பார்கள். அதை பயன்படுத்தி டி20 கிரிக்கெட்டில் ரிசப் பண்ட் அடித்து நொறுக்குவார். 50 ஓவர் போட்டிகளிலும் அதே வேலையை அவரால் செய்ய முடியும். எனவே அவரை தொடக்க வீரராக களமிறக்குங்கள். 2 பீல்டர்கள் மட்டும் வெளியே இருக்கும் முதல் 10 ஓவர்களில் அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பார்”

“அடுத்த 30 ஓவர்களில் 4 பேர் மட்டுமே வெளியே இருப்பார்கள். அந்த சமயங்களிலும் அவரால் காலியாக இருக்கும் ஒரு சில இடங்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாட முடியும்” என்று கூறினார். இவரது கண்ணோட்டத்தில் யோசித்த இந்திய அணி நிர்வாகமும் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்தது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : விஸ்வாசி ப்ராவோ இடத்தை நிரப்ப சென்னை வாங்க வேண்டிய 4 வீரர்களின் பட்டியல்

அதில் சொதப்பிய ரிஷப் பண்ட் சமீபத்தில் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரிலும் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று சுமாராகவே செயல்பட்டார். மொத்தத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 1 – 7 வரை அனைத்து பேட்டிங் இடங்களிலும் வாய்ப்பை பெற்றுவிட்ட அவர் எதிலும் சிறப்பாக செயல்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement