இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ சமீப காலமாகவே பல்வேறு விதமான விமர்ச்சனத்திற்கு ஆளாகி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய மகளிருக்கான கிரிக்கெட் அணிக்கும், ஆடவருக்கான கிரக்கெட் அணிக்கும் இடையில் மிகப் பெரிய பாரபட்சத்தை பிசிசிஐ காட்டுகிறது என்ற செய்தி தினம்தோறும் பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்தியாக வலம் வந்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமீபத்தில் தான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கான ஊதியப் பட்டியலை வெளியிட்டு மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கும் பிசிசிஐயின் மீது தற்போது மிகப் பெரிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ப்ராட் ஹாட்ஜ்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில், இறுதி ஆட்டம் வரை சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடம் பிடித்திருந்தது. அந்த ஆண்டின் இறுதியிலேயே, அந்த உலக கோப்பை தொடரில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, பரிசுத் தொகையாக 5,00,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த பரிசுத் தொகையை இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய வீராங்கனைகளுக்கு பிரித்துக் கொடுக்காமல் வைத்திருக்கிறது பிசிசிஐ.
இப்படி இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பரிசுத் தொகையை தராமல் பிசிசிஐ இழுத்தடிப்பதை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டது, ஒரு பிரபலமான தனியார் இணையதளம். இந்த செய்தியைப் பார்த்த ப்ராட் ஹாட்ஜ், அந்த செய்திக்கு கீழே கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக விளையாடிய வீரர்களின் சம்பளத்திலேயே இன்னும் பிசிசிஐ 35 சதவீதத்தை தரவில்லை. அதை கண்டுபிடித்து தர ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ளார்.
BCCI under yet more pressure over its treatment of women’s team after it emerges that players have still not been paid prize money due from 2020 World Cup.
Report by @izzywestbury https://t.co/9VukwZWfLF
— Telegraph Cricket (@telecricket) May 23, 2021
2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா மற்றும் புனே வாரியர்ஸ் இந்தியா என்ற இரண்டு புதிய அணிகளை இணைத்தது பிசிசிஐ. அதில் ப்ராட் ஹாட்ஜ் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிக்கு அளிக்க வேண்டிய 10% சதவீத காப்புரிமை பணத்தை அளிக்கவில்லையென்று, கொச்சி டஸ்கர்ஸ் அணியை அதற்கு அடுத்த ஆண்டே தொடரிலிருந்து வெளியேற்றியது பிசிசிஐ. தற்போது, பத்து வருடங்கள் ஆகியும் அந்த அணியில் விளையாடிய வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தில், 35 சதவீத பணத்தை பிசிசிஐ இன்னும் வழங்கவில்லை என்று ப்ராட் ஹாட்ஜ் குற்றம் சாட்டியிருக்கிறார்.
Players are still owed 35% of their money earned from ten years ago from the @IPL representing Kochi tuskers. Any chance @BCCI could locate that money?
— Brad Hodge (@bradhodge007) May 24, 2021
சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறயிருக்கிறது. மகளிர் அணிக்கு வழங்க வேண்டிய பரிசுத் தொகை இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு வழங்கப்படுமென்று அறிவித்திருக்கும் பிசிசிஐ, ப்ராட் ஹாட்ஜ்ஜின் இந்த குற்றச் சாட்டுக்கு என்ன பதில் சொல்லும் என்ற கேள்வி தற்போது அனைவரிடமும் எழுந்துள்ளது.