எங்களின் வெற்றிநடையை நிறுத்தியது அவர்தான் – இந்திய சீனியர் பவுலரை பாராட்டும் மார்க் பவுச்சர்

Boucher
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பான போட்டிகளுக்கு பின் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஜூன் 9இல் துவங்கிய இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் பெரிய இலக்கை எளிதாக சேசிங் செய்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் வலுவான இந்தியாவுக்கு அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்து தொடரில் முன்னிலை பெற்றது. அதனால் ஆரம்பத்திலேயே பின்தங்கிய இந்தியா தோல்விகளுக்கு அஞ்சாமல் அதற்கடுத்த 2 போட்டிகளில் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் கச்சிதமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று தொடரை சமன் செய்து தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது.

Keshav-Maharaj-and-Rishabh-Pant

- Advertisement -

இறுதியில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 5-வது போட்டி ஜூன் 19இல் பெங்களூருவில் நடைபெற்றது. ஆனால் மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு இந்தியா 28/2 என தடுமாறிக் கொண்டிருந்தபோது மீண்டும் வலுவாக வந்த மழை வெளுத்து வாங்கியதால் அப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் இந்த தொடரின் வெற்றியாளராக இரு அணிகளும் அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

இந்தியாவின் எழுச்சி:
முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ரிஷப் பண்ட் தலைமையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் இளமையும் அனுபவமும் கலந்த இந்திய அணி களமிறங்கியது. அதில் முதல் 2 போட்டிகளில் படுமோசமான பந்து வீச்சு காரணமாக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா மேலும் ஒரு தோல்வியடைந்தால் சொந்த மண்ணில் தோற்க நேரிடும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

Bhuvaneswar Kumar

இருப்பினும் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தாங்கிப் பிடித்த நிலையில் தோல்விக்கு தங்களது சுமாரான செயல்பாடுதான் காரணம் என்பதை உணர்ந்த இந்திய பவுலர்கள் அடுத்த 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவை தலைநிமிரச் செய்தனர்.

- Advertisement -

தோல்வியிலும் மாற்றம் செய்யாமல் தங்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றிய ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், சஹால் போன்ற பவுலர்கள் இந்தியாவின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் சீனியராக முன்னின்று வழிநடத்திய புவனேஸ்வர் குமார் இந்த தொடரில் 14 ஓவரில் 85 ரன்களை மட்டும் கொடுத்து 6.02 என்ற சூப்பரான எக்கனாமியில் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியதால் தொடர் நாயகன் விருதை வென்றார்.

Boucher

பவுச்சர் பாராட்டு:
அந்த விருதுக்கு அவர் தகுதியானவர் என்றே கூறலாம். ஏனெனில் சஹால், ஹர்ஷல் படேல் போன்ற இந்திய பவுலர்கள் விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது போட்டியிலிருந்து தான் சிறப்பாக பந்து வீசத் தொடங்கினர். ஆனால் டெல்லியில் ரன்களை வாரி வழங்கிய முதல் போட்டிக்குப் பின் சுதாரித்த புவனேஸ்வர் குமார் தனது அனுபவத்தை காட்டி 2-வது போட்டியில் பவர்பிளே ஓவரில் 3 விக்கெட்டுக்கள் எடுத்து மொத்தமாக 4 விக்கெட்டுகள் இடத்தில் இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். ஆனால் இதர பவுலர்கள் கைகொடுக்க தவறியதால் அப்போட்டியில் இந்தியா தோற்றது. இருப்பினும் அவரை பார்த்து தான் 3-வது போட்டியில் இருந்து எஞ்சிய பவுலர்களும் உத்வேகமடைந்து சிறப்பாக பந்து வீசினார்கள்.

- Advertisement -

இந்நிலையில் ஆரம்பத்திலேயே 2 அடுத்தடுத்த வெற்றிகளுடன் வெற்றி நடை போட்டு வந்த தங்களைத் தடுத்து நிறுத்தியதில் புவனேஸ்வர் குமாரின் பங்கு நிறைய இருந்ததாக தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் மார்க் பவுச்சர் பாராட்டியுள்ளார். இது பற்றி தொடர் முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “வெற்றி நடை போட்டு வந்த எங்களுக்கு எதிராக இந்த தொடர் முழுவதும் புவனேஸ்வர் குமார் ஸ்பெஷலாக தரமாக பந்துவீசினார். பவர்பிளே ஓவர்களில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற எங்களுக்கு டெல்லியை தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக பந்துவீசிய அவர் எங்களுக்கு பெரிய அழுத்தத்தை உண்டாக்கினார். மேலும் பவர்பிளே ஓவர்களில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் இந்தியா எங்களை அதிரடியாக விளையாடியது” என்று கூறினார்.

Bhuvaneswara Kumar

முதல் 2 போட்டிகளில் வென்ற பின்பு அடுத்த 3இல் 1 வெற்றி பெற்றாலும் கோப்பையை வென்று விடலாம் என்ற நல்ல நிலைமையை கடைசியில் தென் ஆப்பிரிக்கா கோட்டைவிட்டது பற்றி மார்க் பவுச்சர் மேலும் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டிக்கு முன்பே ஐடன் மார்க்ரம் காயத்தால் விலகியது கடினமாக இருந்தது. நாங்கள் 6 பேட்ஸ்மேன்களை வைத்து மார்க்ரமை 6-வது பந்து வீச்சாளராக உபயோகப்படுத்த திட்டமிட்டோம். ஆனால் அது நடக்கவில்லை.

இதையும் படிங்க : தினேஷ் கார்த்திக்கின் எழுச்சி அங்குதான் தொடங்கியது – பின்னணியை பகிரும் முன்னாள் பேட்டிங் கோச்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. மேலும் ஐபிஎல் தொடரில் முழுவதுமாக பங்கேற்று விட்டு எங்களது வீரர்கள் திரும்பவும் இந்தியாவுக்கு வந்து அடுத்தடுத்து விளையாடியது அவர்களுக்கு கடினமாக அமைந்தது” என்று கூறினார்.

Advertisement