14வது ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், மும்பை வான்கடே மைதானத்திலும் நடைபெற்று வருகின்றன. இதில் வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானம் என்பதால் அதிக அளவு ரன்கள் குவிக்கப்பட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் மும்பையில் விளையாடும்போது சிறப்பாக விளையாடி வருகிறது.
ஆனால் அதற்கு நேர்மாறாக சென்னையில் விளையாடப்படும் அனைத்து போட்டிகளும் லோஸ்கோரிங் போட்டியாகவே இருக்கின்றது. போட்டி திரில்லிங்காக சென்றாலும் மைதானத்தில் அதிக அளவு ரன்களை குவிக்க முடியவில்லை என்பதால் அதன் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் உள்ளன. சுழல் பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் சென்னை மைதானம் இந்த வருடம் அதிக அளவு ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் மைதானமாக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த சென்னை சேப்பாக்கம் மைதானம் ஒரு மோசமான மைதானம் என்றும் 160 முதல் 170 ரன்கள் அடிக்க வேண்டிய போட்டியில் 130 140 ரன்களை மட்டுமே போட்டியில் அடிக்கும் முடிவதாக ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறிய நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள கருத்தில் : ஐபிஎல் தொடரில் இதற்கு மேல் இந்த பிட்ச் மோசமாக போகாது என நான் நம்புகிறேன். 160 முதல் 170 ரன்கள் குறைந்தபட்ச ஸ்கோர் ஆக எடுக்கவேண்டிய மைதானத்தில் 130 140 ரன்கள் மட்டுமே வருகின்றன. இந்த பிட்ச் சாம்பலுக்கு நிகரானது என காட்டமான கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
Hope the wickets don’t get worse as the @IPL gets deeper into the tournament..160/170 minimum not scraping to 130/140 cause the wickets are trash..
— Ben Stokes (@benstokes38) April 23, 2021
இவரின் இந்த கருத்துக்கு சில ஆதரவுகள் இருந்தாலும் பல கண்டனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் கிரிக்கெட்டை பொறுத்த வரை எந்த மைதானத்திலும் விளையாட தயாராக இருக்க வேண்டும். எனவே பேட்டிங் பவுலிங் மைதானம் எனப் பிரித்துப் பார்க்காமல் முறையான கிரிக்கெட்டை வெளிப்படுத்துங்கள் எனவும் ஸ்டோக்ஸுக்கு சிலர் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.