விக்கெட் கீப்பர் சஹாவை மிரட்டிய பத்திரிகையாளர் – பி.சி.சி.ஐ எடுத்துள்ள நடவடிக்கை என்ன தெரியுமா?

Saha
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்குபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மொகாலியில் நடைபெற உள்ள நிலையில் 2-வது போட்டி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது.

saha

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் முக்கிய அம்சமாக சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதில் புதிய டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்பட சமீப காலங்களாக சதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வந்த புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் அந்த அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ரிதிமான் சஹா சர்ச்சை:
அதேபோல் இந்திய அணியில் நீண்ட காலமாக விளையாடி வந்த அனுபவ விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா மற்றும் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரும் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்கள். சமீப காலங்களாக நல்ல பார்மில் இல்லாத காரணத்தாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து விட்டதாலும் இவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

saha

குறிப்பாக இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் பங்கேற்று அதில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இனிமேல் எந்த ஒரு தொடருக்கான இந்திய அணியிலும் இடமில்லை என இந்திய தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா வெளிப்படையாகவே தெரிவித்தது மன வேதனையை அளித்ததாக கடந்த வாரம் சஹா தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அத்துடன் அதே காரணத்துக்காக இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் போதே கௌரவத்துடன் ஓய்வுபெறும் முடிவு பற்றி சிந்திக்குமாறு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்ததாகவும் சகா வருத்தத்துடன் கூறியிருந்தார். அந்த வேளையில் இதுபற்றி விரிவான விவரங்களை பேட்டியாக எடுக்க இந்தியாவைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் தம்மைத் தொடர்பு கொண்டதாக தெரிவித்த சகா அதற்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் அவர் கோபத்தில் தன்னை மிரட்டியதாக பகிரங்க குற்றச்சாட்டு எழுப்பினார். அதற்கு ஆதாரமாக அந்த மூத்த பத்திரிக்கையாளர் தம்முடன் பேசிய உரையாடல்களை பெயரை குறிப்பிடாமல் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

விசாரணை குழு:
இந்தியாவுக்காக விளையாடிய ஒரு கிரிக்கெட் வீரரை ஒரு சாதாரண பத்திரிக்கையாளர் இப்படி மிரட்டும் அளவுக்கு பேசியது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதைப் பார்த்த வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் அந்த பத்திரிகையாளரின் பெயரை குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டபோதும் அவர் அதை செய்யவில்லை. மொத்தத்தில் கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சனையால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு மிகப் பெரிய சலசலப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சஹாவை மிரட்டியது யார் என்பது பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது. இதுபற்றி பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். “இந்திய கிரிக்கெட் வீரர் சகாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய மூத்த இந்திய பத்திரிகையாளர் யார் என்பதைப் பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது. இந்த குழுவில் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ பொருளாளர் அர்ஜுன் துமல், பிசிசிஐ தலைமை கூட்ட நிர்வாகி ப்ராபிட்ஜ் சிங் பாட்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். இவர்கள் இந்த விசாரணையை வரும் வாரங்களில் துவங்க உள்ளார்கள்” என தெரிவித்துள்ளது.

பெயர் தெரிய வருமா:
“பேட்டி எடுப்பதற்காக நான் செய்த அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இனிமேல் உங்களை எப்போதும் பேட்டி எடுக்க மாட்டேன். அதேசமயம் இந்த அவமானத்தை அவ்வளவு எளிதாக விட்டு விடவும் மாட்டேன் மறக்கவும் மாட்டேன்” என மிரட்டல் அளிக்கும் வகையில் அந்த மூத்த பத்திரிகையாளர் சகாவிடம் தெரிவித்திருந்தார். இதுபற்றி பிசிசிஐ கூறியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ள ஒரு கிரிக்கெட் வீரரை பேட்டி எடுப்பதற்கு முயற்சி செய்த மூத்த பத்திரிகையாளர் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் மிரட்டல் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். எனவே இதுபற்றி விரிவாக விசாரிக்கப்படும்” என அறிவித்துள்ளது. இதனால் ஒரு இந்திய கிரிக்கெட் வீரரை மிரட்டிய சாதாரண பத்திரிகையாளரின் பெயர் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மோர்கன், வில்லியம்சன் ஆகியோரை முந்தி சாதனை படைக்க ரோஹித்துக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு – இன்று நடக்குமா?

அது மட்டுமல்லாமல் பிசிசிஐயில் இருக்கும் வரை கண்டிப்பாக இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தது மற்றும் சேட்டன் சர்மா, ராகுல் டிராவிட் போன்ற முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் நான்கு சுவருக்குள் தெரிவித்த கருத்துக்களை வெளியில் கூறியதற்காக சகா மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Advertisement