இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி 364 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ராகுல் 129 ரன்களையும், கேப்டன் கோலி 42 ரன்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணி ஆனது மூன்றாவது நாள் மூன்றாவது செஷன் வரை 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் குவித்துள்ளது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 119 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை தொடங்கிய ஜோ ரூட் (48) மற்றும் பேர்ஸ்டோ (6) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரூட் தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அதே வேளையில் பேர்ஸ்டோ 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். பொதுவாகவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாயகரமான அதிரடி வீரராக திகழும் பேர்ஸ்டோ டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வளவாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கிடையாது.
இந்நிலையில் இந்த முதல் இன்னிங்சில் அவர் அடித்த அரைசதத்தின் மூலம் அவர் இரண்டு ஆண்டு மோசமான சாதனை ஒன்றை தகர்த்துள்ளார். அதன்படி 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரைசதம் கடந்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்த போட்டியில் 57 ரன்கள் அடித்தது மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக அரை சதத்தை கடந்து தனது மோசமான நிலையை அவர் கடந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.