ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென் ஆப்பிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை கோட்டை விடும் வகையில் ஃபைனலில் போராடி தோல்வியடைந்தது. குறிப்பாக 1992 உலக கோப்பை மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவோம் என்று வாயில் அதிகமாக பேசிய அந்த அணி பந்து வீச்சில் உயிரை கொடுத்த போராடியது போதிலும் பேட்டிங்கில் 150 ரன்களை கூட எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதற்கு அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஆகிய ஓப்பனிங் ஜோடி சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் கேப்டனாக முன்னின்று அசத்த வேண்டிய பாபர் அசாம் இந்த தொடரில் 93 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி பேட்டிங் துறையில் தோல்விக்கு முதல் காரணமாக அமைந்தார். முன்னதாக கடந்த ஒரு வருடமாகவே நிலவும் மிடில் ஆர்டர் பிரச்சனையை சரி செய்வதற்காக கேப்டனாக அணியின் நலனை கருதி தன்னுடைய ஓப்பனிங் இடத்தை இதர வீரர்களுக்கு கொடுக்க வேண்டுமென அவரிடம் நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர்.
சுயநலமற்ற கோலி:
ஆனால் கடைசி வரை அதை காதில் வாங்காத அவர் ஓப்பனிங் இடத்திலேயே சுமாராக விளையாடி வருகிறார். அதனாலேயே வாசிம் அக்ரம், கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாபர் அசாம் ஒரு சுயநலமான கேப்டன் என்று வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் அணியின் நலன் கருதி சுயநலமாக எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை இந்தியாவின் விராட் கோலியை பார்த்து அவர் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவின் கேப்டனாக இருந்த விராட் கோலி உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களால் கடந்த டி20 உலக கோப்பை தோல்விக்கு பின் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் அதை பயன்படுத்திய பிசிசிஐ அவருடைய ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்தது. அதனால் மனமுடைந்த அவர் வெற்றிகரமாக இருந்த போதிலும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அவரை அணியிலிருந்து நீக்குமாறு ஏராளமான விமர்சனங்களை எழுந்தன. ஆனால் எதற்குமே வளைந்து கொடுக்காத விராட் கோலி இந்தியாவின் நலனுக்காக கேப்டன்ஷிப் பதவிகளை துறந்தாலும் விமர்சனங்களை சந்தித்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக இந்த டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து வெற்றிக்கு பாடுபட்டார்.
எனவே அவரை பாபர் அசாம் பின்பற்ற வேண்டுமென தெரிவிக்கும் கனேரியா இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “சுயநலமின்றி நடந்து கொள்வதில் விராட் கோலி போல் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் அவரது தலைமையில் உலகக் கோப்பையில் இந்தியா தோற்ற போது அதற்கான மொத்த பழியும் அவர் மீது விழுந்தது. ஆனாலும் அதற்காக விட்டுக் கொடுக்காத அவர் புதிய கேப்டனுக்கு தன்னுடைய முழு ஆதரவை கொடுத்து புதிய கேப்டன் என்ன கேட்கிறாரோ அதற்கேற்றார் போல் செயல்பட்டு வருகிறார்”
“ஆனால் பாகிஸ்தான் அணியிலோ பாபர் அசாம் தன்னுடைய ஓப்பனிங் இடத்தை விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். குறிப்பாக பிஎஸ்எல் தொடரில் கூட கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய போதும் அவர் இதே போல நடந்து கொண்டார். மிடில் ஆர்டரில் இந்தளவுக்கு வெற்றிகரமாக பேட்டிங் செய்ய முடியாது என்பதாலேயே அவர் பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் அப்படி பிடிவாத குணத்துடன் பெரும்பாலான போட்டிகளில் மெதுவாக விளையாடும் அவரால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய தீங்கு தான் நடந்தேறி வருகிறது” என்று கூறினார்.