ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணிக்கு 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கொல்கத்தா அணி சார்பாக 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரசல் 44 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ரசலின் இந்த ஆட்டம் காரணமாகவே கொல்கத்தா அணி ஓரளவு ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர் டுபிலிஸிஸ் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். தீபக் சாகர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
இந்த போட்டியை காண தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான அட்லீ தனது மனைவி ப்ரியா உடன் போட்டியை நேரில் கணவந்தார். வி.ஐ.பி பாசில் மைதானத்திற்குள் வந்த அட்லீ கொல்கத்தா அணியின் உரிமையாளரும், ஹிந்தி படவுலகின் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கான் உடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார்.
*#Thala, Chennai Express Super!*#WhistlePodu #Yellove #CSKvKKR ???????? pic.twitter.com/bWIx9FyCq5
— Chennai Super Kings (@ChennaiIPL) April 9, 2019
போட்டி முடிந்த பிறகு தோனி ஷாருக் கான் அமர்ந்திருந்த இடத்தினை நோக்கி வந்தார். அப்போது, அட்லீயின் வேண்டுகோளுக்கு இணங்க ஷாருக் கான் அட்லீயை தோனிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தோனியின் தீவிர ரசிகரான அட்லீ தோனியை நேரில் காணவே சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்ததாகவும், எனவே ஷாருக் கான் உதவியுடன் தோனியை சந்தித்த சந்தோஷத்தில் அட்லீ உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.