2024 டி20 உ.கோ தொடரில் ரிங்குவுக்கு போட்டியா அந்த 2 பிளேயர்ஸ் இருக்காங்க.. எச்சரித்த நெஹ்ரா

Ashish Nehra 5
- Advertisement -

வெற்றிகரமாக நிறைவு பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. குறிப்பாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா சிறப்பாக விளையாடி கோப்பை வென்று ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த தொடரில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய் போன்ற நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியின் முக்கிய பங்காற்றியதுடன் தங்களை வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக அடையாளப்படுத்தினர். அதில் ரிங்கு சிங் 4 போட்டிகளில் 105 ரன்களை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார்.

- Advertisement -

போட்டிக்கு 2 வீரர்கள்:
கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் அடுத்தடுத்த 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்ததால் இந்தியாவுக்காக அறிமுகமான ரிங்கு சிங் அயர்லாந்து டி20 தொடரிலும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கிடைத்த வாய்ப்பில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். அதே போல இத்தொடரிலும் அசத்திய அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் ஃபினிஷராக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா ஆகிய இளம் வீரர்களும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக்கூடிய திறமையை கொண்டிருப்பதால் 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2024 டி20 உலகக் கோப்பையில் இடம் பிடிப்பதற்கான ஒரு வீரராக ரிங்கு சிங் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”

- Advertisement -

“ஆனால் அதற்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால் அந்த இடத்தை பிடிப்பதற்கு அவர் இன்னும் நிறைய சவால்களில் போட்டியிட வேண்டும். குறிப்பாக ஜித்தேஷ் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோரையும் நீங்கள் பார்க்க வேண்டும். நாம் ஏற்கனவே சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடும் இடத்தைப் பற்றி விவாதித்துள்ளோம்”

இதையும் படிங்க: தோனி, விராட் கோலி அங்க வந்தா மட்டும் போதும்.. நாங்க பாத்துக்குவோம்.. ஏபிடி அழைப்பு

“எனவே 15 பேர் கொண்ட இந்திய அணியில் எத்தனை இடங்கள் காலியாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆனால் ரிங்கு சிங் அனைவரது கண்களையும் திறக்க வைத்து அழுத்தமான சூழ்நிலையில் தம்மால் அசத்த முடியும் என்பதை காண்பித்துள்ளார். இருப்பினும் தென்னாப்பிரிக்க தொடர், ஐபிஎல் உட்பட 2024 உலகக் கோப்பைக்கு முன்பாக இன்னும் நிறைய காலங்கள் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement