இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அடுத்ததாக இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர சீனியர் வீரரான விராட் கோலியும் தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விருப்பம் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலியிடம் வேண்டுகோள் வைத்த அம்பத்தி ராயுடு :
இந்திய அணிக்காக கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான விராட் கோலி இதுவரை 123 போட்டிகளில் விளையாடி 30 சதம் மற்றும் 31 அரைசதம் என 9,230 ரன்களை குவித்திருக்கும் வேளையில் அவர் தனது 36-வது வயதிலேயே இப்படி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற விருப்பம் உள்ளதாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் பி.சி.சி.ஐ அவரின் இந்த முடிவை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனாலும் விராட் கோலி தனது முடிவிலிருந்து பின்வாங்க போவதில்லை என்று தெரிகிறது.
எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி துவங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அடுத்தடுத்து இரண்டு அனுபவ வீரர்களின் ஓய்வு முடிவை எடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலி மீண்டும் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்து தொடர்ந்து இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு அவருக்கு சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :
இதையும் படிங்க : விராட் கோலியின் ஆசை.. ஸ்ட்ரிக்ட்டாக மறுத்த பி.சி.சி.ஐ – ஓய்வு முடிவுக்கு பின்னால் இருக்கும் காரணம்
தற்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தை நீங்கள் கைவிட வேண்டும். முன் எப்போதையும் விட தற்போதுதான் இந்திய அணிக்கு நீங்கள் அதிகம் தேவை. உங்களிடம் இன்னும் நிறைய வலிமை இருக்கிறது. இந்திய அணியில் நீங்கள் இல்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட் முன்பு இருந்ததுபோல் இருக்காது. தயவுசெய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என ராயுடு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.