ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிப்பது பலரையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. ஏனெனில் வரலாற்றில் 10 இறுதிப் போட்டிகளில் விளையாடிய சென்னை 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனைப் படைத்துள்ளது. இருப்பினும் இந்த வருடம் பேட்டிங்கில் அதிரடியாக விளையாட முடியாததால் 9 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை பிளே ஆஃப் வாய்ப்பை 99% இழந்துள்ளது.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், தோனி காரணமாக தாம் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளின் பெரிய ரசிகன் என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார். இருப்பினும் இம்முறை ஏலத்தில் சிஎஸ்கே அடித்து நொறுக்கக்கூடிய வீரர்களை வாங்கத் தவறியதே இந்த சரிவுக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் சிஎஸ்கே அணியில் அடிக்கடி மாற்றங்களை பார்க்க முடியாது என்றும் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
தோனி ரசிகன்:
ஆனால் இம்முறை தொடர் தோல்விகளால் அடிக்கடி அவர்கள் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்வதும் தமக்கு ஆச்சரியமளிப்பதாக ஜடேஜா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2023இல் கோப்பையை வென்ற சென்னை 2024இல் சந்தித்த தோல்வி அவர்களுக்கு இதை விட பெரிய வலியைக் கொடுத்திருக்கும்”
“நீங்கள் 2023இல் வெற்றி பெற்றதால் அதே வீரர்களை வைத்து அடுத்த வருடமும் வெல்லலாம் என்று நம்புவீர்கள். ஆனால் அங்கே உங்களை தலையை குனிய வைக்கும் வளைவும் இருக்கும். நான் மிகப்பெரிய சிஎஸ்கே மற்றும் மும்பை ரசிகன். நாம் கிரிக்கெட்டை இந்த தலைமுறையில் அதிகம் பார்க்க சச்சின் மற்றும் தோனி முக்கிய காரணமாக இருப்பவர்கள். அப்படிப்பட்ட எனக்கு சிஎஸ்கே ஆட்டம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது”
தவறிய 2 விஷயங்கள்:
“ஆனால் ஏலத்தில் நீங்கள் முதலில் மற்ற அணிகளைப் போல ஃபயர்பவரை வாங்க வேண்டும். அது தான் வெற்றியைத் துவங்குவதற்கான சாவி என்று நினைக்கிறேன். அதையும் தாண்டி நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் சரியாக செல்லவில்லையெனில் இயற்கையாகத் தோற்பீர்கள். நீண்ட காலமாக நான் பார்த்து வரும் சிஎஸ்கே அணி அதிக மாற்றங்களை செய்ய மாட்டார்கள்”
இதையும் படிங்க: 209 ரன்ஸ்.. கிங் கோலியின் மகுடத்தை ஒரே நாளில் பறித்த சாய் சுதர்சன்.. ராஜஸ்தானை பந்தாடிய கில், பட்லர்
“உங்களுக்கு நினைவிருந்தால் 2008 ஐபிஎல் தொடரில் ஷேன் வார்னே தடுமாற்றமாகவே விளையாடினார். ஆனாலும் அவர் இறுதிப்போட்டி வரை விளையாடினார். ஆனால் இம்முறை சிஎஸ்கே அணியில் கான்வே 3 போட்டியில் விளையாடி பின்னர் ரச்சின் விளையாடினார். இது சிஎஸ்கே அணியில் நான் பார்க்கக்கூடிய புதிய விஷயமாகும். அது ஏன் என்று தெரியவில்லை? ஒருவேளை அவர்கள் ஏலத்தில் சரியாக செயல்படாத காரணத்தால் இந்தக் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம்” என்று கூறினார்.