கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 15 வருடங்களில் நம்ப முடியாத விஸ்வரூப வளர்ச்சி கண்டு இன்று உலகின் நம்பர் ஒன் தொடராக முன்னேறி சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக உருவெடுத்துள்ளது. அதைப் பார்த்து உலகம் முழுவதிலும் இருக்கும் வெளிநாடுகளும் தனித்தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் ஐக்கிய அரபு நாடுகளில் இந்த வருடம் முதல் முறையாக ஐஎல் டி20 எனப்படும் புதிய தொடர் உருவாக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஜனவரி 29ஆம் தேதியன்று நடைபெற்ற 21வது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மாற்றும் டெசர்ட் வைப்பர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
புகழ்பெற்ற சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எமிரேட்ஸ் 20 ஓவர்களில் சரவெடியாக செயல்பட்டு 241/3 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே 141 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஆண்ட்ரே பிளட்சர் 50 (39) ரன்களும் முகமத் வாசிம் அதிரடியாக 11 பவுண்டரியுடன் 4 சிக்சருடன் 86 (44) ரன்களும் விளாசி அவுட்டானார்கள். அவர்களுக்கு பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் கைரன் பொல்லார்ட் வழக்கம் போல ஆரம்பம் முதலே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
ரசிகரின் செயல்:
அவருடன் மறுபுறம் அசத்திய மவுஸ்லி 3 பவுண்டர் 2 சிக்சருடன் 31* (17) ரன்கள் அடித்தார். அதில் ஒரு சிக்ஸர் சார்ஜா மைதானத்திற்கு வெளியே சென்ற போது அங்கே காத்திருந்த ஒரு ரசிகர் வழக்கம் போல அதை எடுத்துக்கொண்டு வேக வேகமாக ஓடினார். அந்த நிலையில் மறுபுறம் முரட்டுத்தனமாக அடிக்கக்கூடிய கைரன் பொல்லார்ட் டாம் கரன் வீசிய 19வது ஓவரின் 3வது பந்தில் வெறித்தனமான சிக்சரை பறக்க விட்டார். அவரது முரட்டு அடியில் மிட் விக்கெட் திசையில் 104 மீட்டர்கள் பறந்த அந்த சிக்ஸர் சார்ஜா மைதானத்திற்கு பந்தை வெளியே கொண்டு சென்று போட்டது.
Watch out on the road ⚠️
Kieron Pollard whacks it out of the ground 👀 pic.twitter.com/KexDdNsXm8
— Cricket on TNT Sports (@cricketontnt) January 29, 2023
ஆனால் அப்போது அதை கவனித்த மற்றொரு ரசிகர் சாலையை கடந்து வந்து பந்தை எடுத்து பார்த்து விட்டு அப்படியே எடுத்துக் கொண்டு ஓடாமல் ஒரு பந்து பல்லாயிரம் ரூபாய் விலை பெறும் என்பதையும் நாம் பந்தை எடுத்துச் சென்றால் போட்டி தாமதமாகும் என்பதையும் உணர்ந்து மீண்டும் பந்தை மைதானத்திற்குள் தூக்கிப்போட்டு உண்மையான ரசிகனுக்கு அடையாளமாக நடந்து கொண்டார். பொதுவாக இது போல் பந்து கிடைத்தால் எடுத்துக்கொண்டு ஓடும் ரசிகர்களுக்கு மத்தியில் அந்த குறிப்பிட்ட ரசிகரின் செயல் இதர ரசிகர்களின் நெஞ்சங்களை தொடுவதாக உள்ளது.
மேலும் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் இது போல் பல ரசிகர்கள் சார்ஜா மைதானத்திற்கு வெளியே காத்திருந்து பந்தை எடுத்த கதைகளை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 4 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்ட பொல்லார்ட் 50* (19) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். அதைத் தொடர்ந்து 215 என்ற கடினமான இலக்கை துரத்திய வைப்பர்ஸ் அணி எமிரேட்ஸ் அணியின் தரமான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 12.1 ஓவரில் வெறும் 84 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது.
அதனால் 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற எமிரேட்ஸ் அணிக்கு பொல்லார்ட் விளையாடி ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் இவர் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றிருக்கக் கூடாது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் 2010 முதல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதே போல் பல போட்டிகளில் முரட்டுத்தனமாக அடித்து 5 கோப்பைகளை வெல்வதில் முக்கிய பங்காற்றிய அவர் 2022 சீசனில் முதல் முறையாக பார்மை இழந்து தடுமாறியது மும்பை அணியின் வெற்றியில் எதிரொளித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க: தல தோனியின் வழிதான் என் வழி. இனியும் அப்படிதான் நடப்பேன் – கேப்டன் ஹார்டிக் பாண்டியா கருத்து
அதனால் விமர்சனங்களை சந்தித்து பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அவர் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதாக அறிவித்து மும்பை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.